தமிழக மக்களுக்கு விருதை சமர்ப்பித்த ரஜினி!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கியது. வரும் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷ்யாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
 
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. இந்த நிலையில் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதான ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ எனும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு விருது வழங்கினர். விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது: ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என கூறினார்.

Comments