’ஆடை’ படத்தில் பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்: அமலாபால்!

அமலா பால் நடிப்பில் ’ஆடை’ என்ற படம் வெளியாக இருக்கிறது. மேயாத மான் ரத்னகுமார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அமலா பால் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். 
 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆடை படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்ததில் தர்மசங்கடம் இல்லை. நிறைய படங்களில் பாடல்களில் கவர்ச்சி காட்ட சொல்வார்கள். அப்போது தான் தர்மசங்கடம் ஏற்படும். இந்த காட்சியில் அப்படி எந்த கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை. ரசிகர்கள் இதை இப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
பெற்றோர் சம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறினேன். அதிர்ச்சி ஆனார். நல்ல கதையா? என்று மட்டும்தான் கேட்டார். நியாயமான கதை என்றதும் சம்மதித்தார். நான் நடிக்க வரும்போதே என் அப்பா என்னிடம் ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என்று துணிச்சல் கொடுத்தவர். எனவே இந்த படத்தில் நடிக்க எனக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.
 
நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், என்னை நானே உறுதியாகவும் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். சவால் என்று தெரியும். அதை எப்படி செய்யப்போகிறேன் என்று தெரியாமலேயே நடித்து முடித்தேன். அதை உலகே பார்க்க போகிறார்கள் என்ற எண்ணமும் இருக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை எல்லாமே இருந்தது. அது முடிந்த உடன் அவை எல்லாமே என்னை விட்டு போனது. அடுத்தடுத்த நாட்களில் நான் என்னை பவர்புல் உமனாக உணர்ந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments