நடிகர் விஷால் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: ஆக.1-க்கு ஒத்திவைப்பு!

நடிகர் விஷால் மீதான வரி ஏய்ப்பு வழக்கு, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சேவை வரித்துறையினர் விஷால் அலுவலகத்தில் நடத்திய சோதனையில், அவர் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாதற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேவை வரித்துறை அதிகாரிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பினர். பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் விஷால் மீது சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சில காரணங்களுக்காக விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் அந்த வழக்கானது நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.வழக்கு விசாரணையின் போது, விஷால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி, அவரது தரப்பு வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். இதற்கு சேவை வரித்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, விசாரணைக்கு தேவைப்படும்போது விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றார். இதை விஷால் தரப்பு வழக்குரைஞர் ஏற்றுக்கொண்டு, அவர் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றார். இதைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்காக வழக்கை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Comments