பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள டுவிட்டருக்கு: காயத்ரி ரகுராம் பதிலடி பதிலடி!

சமீபகாலமாக டுவிட்டரில் கஸ்தூரியைப் போன்று சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் நடிகையும், நடன மாஸ்டருமான காயத்ரி ரகுராம். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குகிறார். இவர், தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ரஞ்சித் டுவிட்டரில், "நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ரிதுஸ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு. நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு. அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நாம். இவர்கள்தான் இதை நிகழ்த்தியவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித்தின் இந்த பதிவுக்கு எதிர்கருத்து கூறியதோடு கேள்வியும் எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம். அவரது டுவிட்டர் பதில், "நீங்கள் எடுக்கும் ஒரு படம் தோல்வியடைந்து விட்டால் தற்கொலையா செய்து கொள்வீர்கள்? அல்லது அதைவிட நல்ல படம் எடுக்க முயற்சிப்பீர்களா? அல்லது ஒரேயடியாக படங்களையே தடைசெய்ய சொல்வீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

காயத்ரி மட்டுமல்ல ரஞ்சித்தின் டுவிட்டர் பக்கத்திலும் ஏராளமான பேர் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர். குறிப்பாக கோவையில் ஓட்டல் காவலாளியின் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி போட்டோ உடன் வெளியாகி உள்ளது. அதை அவருக்கு ரீ-டுவீட் செய்து, "இதுவும் பிள்ளைதான் எதை ரோல்மாடலாக எடுக்க போறீங்க இதில் இருக்கிறது உங்கள் முன்னேற்றம்" என பதிவிட்டுள்ளனர்.

Comments