நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதே..ரஜினி வருத்தம்!

நடிகர் சங்கத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. சென்னை மந்தவெளியில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
படப்பிடிப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்களுக்கு தபால் ஓட்டுப் படிவம் அனுப்பப்படும். அவர்கள் தங்கள் ஓட்டை தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை 5 மணிக்கு முன் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த முறை நீதிமன்ற வழக்கு காரணமாக கடைசி நேரத்தில் தான் தேர்தல் நடப்பது உறுதியானது.
 
இதனால் வெளியூரில் உள்ள பல உறுப்பினர்களுக்கு தபால் ஓட்டு படிவத்தை சரியான நேரத்தில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் ரஜினிக்கும் ஓட்டு படிவத்தை சரியான நேரத்தில் அனுப்ப முடியவில்லை. இதனால் ரஜினியால் இந்த தேர்தலில் ஓட்டு போட இயலவில்லை. இதுகுறித்து நடிகர் ரஜினி டிவிட்டர் பக்கத்தில் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நடிகர் சங்கத் தேர்தல் வாக்குச்சீட்டு எனக்கு மாலை 6.45 மணிக்கு தான் கிடைத்தது.
 
முன்கூட்டிய பெற நான் முயற்சி எடுத்து அது நடக்கவில்லை. இந்த தாமதத்தின் காரணமாக என்னால் வாக்களிக்க முடியவில்லை. இது விசித்திரமாகவும், துரதிர்ஷ்டமாகவும் இருக்கிறது. இது நடந்திருக்கக்கூடாது", என தெரிவித்துள்ளார். நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்துக்கு இடையே பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் சனிமாவின் உச்ச நடிகரும், சங்கத்தின் மூத்த உறுப்பினருமான ரஜினியால் வாக்களிக்க முடியாமல் போனது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments