குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லதா ரஜினிகாந்த்,

குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். இந்த அமைப்பை தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளோம். தற்போது கோவையில் துவங்குவதற்கான ஆலோசணை நடத்தியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா விதமான இடங்களிலும் வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை, குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும். இந்த காலத்தில் தனிதனியாக குடும்பங்கள் இருப்பதும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளை பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.
பெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான பிரச்சணைகளை 18001208866 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம், பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments