நடிகர் ஆர்யாவை தேர்வு செய்த இடத்தில், நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சி!

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற படத்தை இயக்கினார் இயக்குநர் பாலா. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான வர்மா படத்தில் நடிகை ரைசா விலசனும் துருவ் விக்ரமுடன் சேர்ந்து நடிக்க, படம் விறுவிறுவென படமாக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தயார்ப்பு குழுவினர், படத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை எனக் கூறி, படத்தை முழுமையாக கைவிட்டு விட்டு, படத்தை புது முக இயக்குநர் ஒருவரை வைத்து, மீண்டும் படமாக்கத் துவங்கினர். படத்துக்கு ஆதித்ய வர்மா என பெயர் சூட்டப்பட்டு, அதே துருவ் விக்ரம் நடிக்க மீண்டும் படமாக்கப்பட்டு விட்டது.
 
இதனால், இயக்குநர் பாலா ரொம்பவும் அப்செட் ஆனார். தன்னுடைய படம், முழு திருப்தி இல்லை என தயாரிப்பாளர் தரப்பு கூறியதில், பெருத்த அவமானமாக கருதினார் பாலா. இதையடுத்து, இரட்டை கதாநாயகர்களை வைத்து, ஒரு படம் எடுக்க, கதை தயார் செய்தார். இதில், ஏற்கனவே நான் கடவுள், அவன் இவன் போன்ற பாலாவின் படங்களில் நடித்த நடிகர் ஆர்யா மற்றும், பாலாவின் பரதேசி படத்தில் நடித்த அதர்வாவையும் இணைத்து நடிக்க வைக்க முயற்சித்தார் பாலா. கதை கேட்ட அதர்வா ஒப்புக் கொண்டார். ஆனால், கதையை கேட்ட பின், நடிகர் ஆர்யா இதோ, அதோ என இழுத்துக் கொண்டே போனார். இறுதியில், தனக்கு இரு ஆண்டுகளுக்கு கால்சீட் இல்லை என சொல்ல, இயக்குநர் பாலா ரொம்பவும் அப்செட் ஆனார். இதையடுத்து, நடிகர் ஆர்யாவை தேர்வு செய்த இடத்தில், நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

Comments