ஹாலிவுட் காப்பி: 30 வருடத்திற்கு பிறகு வெளிவந்த ரகசியம்!

30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கிய இந்தப் படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் காமெடி இன்றளவுக்கும் ரசிக்கப்பட்டு வருகிறது. அதில் இரண்டு காட்சிகள் மிகவும் முக்கியமானது. கரகாட்ட கோஷ்டி காரை தள்ளிக் கொண்டு வரும்போது செந்தில் கவுண்டமணியிடம் இந்த காரை வச்சிருந்த சொப்பன சுந்தரியை யார் வச்சிருந்தா?" என்று கேட்கும் காமெடி.
மற்றொரு காமெடி இதைவிட பிரபலம் வாழைப்பழ காமெடி. கவுண்டமணி செந்திலை இரண்டு வாழப்பழம் வாங்கி வரச் சொல்வார். அவர் ஒரு படம் வாங்கி வருவார். அதை வாங்கிக் கொள்ளும் கவுண்டணி "ஒரு பழம் இங்கிருக்கு இன்னொரு பழம் எங்கே?" என்பார். "அதாண்ணே இது" என்பார் செந்தில்.
 
இதேபோன்ற ஒரு காமெடி 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள ஒரு ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சியில் ஒருவர் தன் நண்பருடன் பழக்கடைக்கு வருகிறார். பழக்கடை காரரிடம் 3 வாழைப்பழம் கேட்கிறார். கடைக்காரர் 2 பழம் கொடுக்கிறார். அதற்கு அவர் "நான் 3 பழம் கேட்டேன் நீங்கள் 2 தானே கொடுத்திருக்கிறீர்கள்" என்கிறார். அதற்கு கடைக்காரர் இரண்டு பழத்தை கையில் பிடித்தபடி "இது ஒரு பழம், இது இரண்டாவது பழம். ஒன்றும், இரண்டும் சேர்ந்தால் மூன்றுதானே" என்கிறார். பழம் வாங்க வந்தவர் தலையை பிய்த்துக் கொண்டு வேறு வழியில்லாமல் அதை ஒப்புக் கொண்டு செல்கிறார். இந்தக் காட்சியைத்தான் கொஞ்சம் மாற்றம் செய்து படமாக்கி இருக்கிறார் கங்கை அமரன்.

Comments