இன்று (ஜூன் 22-ம் தேதி) நடிகர் ஜோசப் விஜய், தனது 45வது பிறந்தநாள்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் விஜய். விஜய்யின் திரை பயணத்தில் வெற்றி, தோல்வி சம அளவில் தான் இருக்கின்றன. இன்று(ஜூன் 22-ம் தேதி) நடிகர் விஜய் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய வசூல் நாயகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உலக அளவில் வைத்திருப்பவர். சிறியவர் முதல் பெரியவர் வரை விஜய்யின் படங்களை ரசித்துப் பார்ப்பவர்கள் அதிகம்.

முழுக்க முழுக்க என்டெர்டெயின்மென்ட் என்பதை மட்டுமே மனதில் கொண்டு தன்னுடைய படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தால் மட்டுமே போதும் என்று முடிவெடுத்து அதற்கேற்றபடி நடித்தும் வருகிறார்.

விஜய்யின் திரைப்பயணம் பற்றி ஒரு சின்ன ரீ-வைண்ட்...

தொடர் தோல்வி
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் விஜய் நடித்திருந்தாலும், 1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் முதல்படமே தோல்வியை கொடுத்தது. அதையடுத்து தனது மகனை விஜய்காந்த் உடன் செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வைத்தார் எஸ்ஏசி., இந்தப்படம் மூலம் விஜய்யும் ஓரளவுக்கு பேசப்படும் நடிகரானார்.

ஆனாலும், அதன்பின் அவர் நடித்த ரசிகன், தேவா, விஷ்னு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை படங்களும் தோல்வியை கொடுத்தன. இதனால் பொருளாதார நெருக்கடிக் ஆளானார் எஸ்.ஏ.சி., மகனை ஹீரோவாக்கமால் விடுவதில்லை என்று போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தினார் எஸ்.ஏ.சி., அதில் வெற்றியும் பெற்றார்.

திருப்பம் தந்த பூவே உனக்காக
விஜய்யும் தன் பயணத்தை மாற்றினார். விளையாட்டுத் தனமான கேரக்டர்களை விட்டுவிட்டு செண்டிமென்டுக்கு வந்தார். பூவே உனக்காக, வசந்த வாசல், காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் இப்படி அவர் தேர்ந்தெடுத்த பாதை அவருக்கு பெண் ரசிகைகளை உருவாக்கியது. தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைக்கத் தொடங்கினார்.

லவ் டூ ஆக்ஷன்
அதன் பிறகு அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரானார். மின்சார கண்ணா, லவ்டுடே, கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே போன்றவை அவரை ரொமாண்டிக் ஹீரோவாக்கியது. இளம் பெண் ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்தது. அடுத்துதான் ஆக்ஷ்ன் அவதாரத்தை ஆரம்பித்தார். பகவதி, தமிழன், திருமலை, சிவாகாசி, திருப்பாச்சி, கில்லி-யென விஜய் ஆடிய ஆக்ஷ்ன் ஆட்டத்தில் பாக்ஸ் ஆபீஸ்கள் கலகலத்தன.

வசூல் சக்கரவர்த்தி
அழகிய தமிழ் மகன், நண்பன், காவலன் போன்ற படங்களில் வேறு தளங்களில் தன் நடிப்பை நிரூபித்தார். துப்பாக்கி படத்தின் முதல் முதன்முறையாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தார் விஜய். அதன்பின்னர் அவர் நடித்த கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்கள் வசூலில் பெரிய சாதனை படைத்தது அனைவரும் அறிந்தது. இன்று நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்தப்படியாக வசூல் சக்கரவர்த்தியாக திகழ்வது விஜய் மட்டுமே. சில ஏரியாக்களில் ரஜினியையும் முந்தியிருக்கிறார் விஜய் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

நடனத்தில் வல்லவர்
கத்தி, மெர்சல் மாதிரியான படங்களில் சமூக அக்கறையை விதைத்தார். விஜய் தன் கேரியரை படிப்படியாக எப்படி வடிமைத்துக் கொண்டார் என்பதையே இது காட்டுகிறது. நடிப்பு மட்டுமல்லாது, தென்னிந்திய நடிகர்களில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர் என பெயரை பெற்றவர். அதுமட்டுமல்ல, தனது படங்களில் 30 பாடல்கள் வரை பாடி பாடகர் என நிரூபித்திருக்கிறார். தற்போது அடுத்தக்கட்டமாக தயாரிப்பாளராகவும் களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அசாத்திய வளர்ச்சி
பலமான சினிமா பின்னணி இருந்தாலும் முதல் படமே சூப்பர் ஹிட் அடுத்தடுத்து வாய்ப்பு, நான்காவது படத்தில் கோடியை தாண்டிய சம்பளம் என்ற புலி பாய்ச்சல் விஜய் கேரியரில் இல்லை. தன் சினிமா பயணத்தில் ஒவ்வொரு அடியையும் பக்குவமாக எடுத்து வைத்து வளர்ந்தார். விஜய்யின் இன்றைய வளர்ச்சி சாதாரணமாகக் கிடைத்ததும் இல்லை. அறிமுகமான நாளிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஏற்றத், தாழ்வுகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு நிலையை அவர் அடைந்திருக்கிறார்.

சமூக அக்கறை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜல்லிக்கட்டு போராட்டம், அனிதா தற்கொலை சம்பவம் போன்ற விஷயங்களில் தனது பங்களிப்பை காட்டி, சமூக அக்கறையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்தாண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை.

அடுத்தக்கட்டம் அரசியல்?
விஜய்க்கு அரசியல் ஆசை உண்டு. எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவது உறுதி. இதை படங்கள் வாயிலாகவும், தன் பட விழாக்களிலும் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். விஜய் ரசிகர்களும் அவ்வப்போது அவரை அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மதுரை ரசிர்கள், விஜய் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைத்து நகரம் முழுவதும் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்த நாளுக்கான டி.பி-யை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் அந்த டி.பி.க்கான போஸ்டரில் 'தரணி ஆள வா தளபதி' என்ற வாசங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிகில் சத்தம்
இந்தாண்டு விஜய் ரசிகர்கள் பிகில் பிறந்தநாளாக கொண்டாடி வருகின்றனர். அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்திருக்கின்றனர். விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். நேற்று(ஜூன் 21) காலையிலிருந்தே இந்த முதல் பார்வை வெளியீட்டைப் பற்றி டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் லட்சக்கணக்கான பதிவுகளைப் போட்டார்கள். 'HBDEminentVijay' என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 21 லட்சம் டுவீட்டுகள் பதிவிடப்பட்டன. அது 72 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளன. அதன் பிறகு மாலையில் படத்தின் பெயரை 'பிகில்' என அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெயர் இந்திய அளவிலும், உலக அளவிலும் டிரென்டிங் ஆனது.

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமூக வலைதளங்களில் முழுக்க ஒரே பிகில் சத்தமாகவும், விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சத்தமும் அதிகளவில் ஒலித்து கொண்டிருக்கிறது.

Comments