சூர்யா தயாரிப்பில் ஜோதிகா-ரேவதி நடிக்கும் ‘ஜாக்பாட்’ காமெடி திரைப்படம்!

சூர்யா-ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல், சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இப்போது அதே 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் ‘ஜாக்பாட்’. 
படத்தில் ஜோதிகாவோடு நடிகை ரேவதி, நடிகர்கள் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.இந்த ‘ஜாக்பாட்’ படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.  விஜய் படத் தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் இணை தயாரிப்பாளராக  இராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்துள்ளார்.இத்திரைப்படம் 2-டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 11-வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த ‘36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்கள் நல்ல பெயரையும், நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன.அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த ‘ஜாக்பாட் படமும் இணையும் என்று தெரிகிறது.சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் படப்பிடிப்பு  முழு வீச்சில் நடைபெற்று சிறப்பாக முடிந்துள்ளது.
 
இப்படத்தின் இயக்குநர் கல்யாண் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தின் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். “இந்தப் படமும் காமெடியை அடித்தளமாக கொண்டதுதான். மேலும் படத்தில் சமூகத்திற்குத் தேவையான ஒரு மெஸேஜூம் இருக்கிறது…” என்கிறார் இயக்குநர்.

Comments