ரஜினி முருகன்: திரை விமர்சனம்!!!

Friday, January 15, 2016
சென்னை:வெற்றிப் பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தான் ‘ரஜினி முருகன்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மீண்டும் இணைந்திருக்கும் சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி. கூட சூரியையும் சேத்துக்கலாம்.
ஊரில் வெட்டியாக சுற்றி வரும் சிவகார்த்திகேயன் தனது அப்பாவின் பாலிய நண்பரது மகளான நாயகி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். ஆனால், கீர்த்தியின் அப்பாவுக்கும், சிவாவின் அப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, காதல் பிரச்சினை வலுக்கிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் தாத்தாவான ராஜ்கிரண், தனது பூர்வீக வீட்டை விற்று அதை தனது வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். வீட்டை விற்கும் நேரத்தில், மதுரையில் மாமூல் மன்னனாக திகழும் சமுத்திரக்கனி, ராஜ்கிரணுக்கு தானும் ஒரு பேரன் தான், இந்த சொத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்று பிரச்சினை செய்கிறார். 
ஒரு பக்கம் காதல் பிரச்சினை, மறுபக்கம் பூர்வீக சொத்தில் பிரச்சினை என்று சிக்கலில் சிக்கிக்கொள்ளும் சிவகார்த்திகேயன், இந்த இரண்டு பிரச்சினைகளையும் எப்படி டீல் செய்து பினிஷ் பண்ணுகிறார் என்பது தான் ‘ரஜினி முருகன்’ படத்தின் கதை.
முதல் படத்தில் முழுக்க முழுக்க காமெடியை நம்பிய இயக்குநர் பொன்ராம், இந்த படத்தில் சற்று ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருந்தாலும், அதையும் காமெடி பின்னணியிலே செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன், தனது கலாய்ச்சல், மிமிக்ரி என்று எப்போதும் போல ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். மற்றபடி அவர் நடிப்பில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை, அதற்கான இடத்தையும் படம் கொடுக்கவில்லை. 
சிவகார்த்திகேயன் நமது கண்னுக்கு புதிதாக தெரியவில்லை என்றாலும், வில்லன் வேடத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனியும், அவரது நடிப்பும் புதிதாக தெரிந்தது. மற்றவர்களு புத்திமதி சொல்வது, புரட்சி வசங்கள் பேசுவது என்று இருந்த சமுத்திரக்கனி, இந்த படத்தில் மதுரை வில்லத்தனத்தை காட்டிய விதத்திற்காக அவருக்கு மலர் கொத்து கொடுக்கலாம்.
கண்களில் மட்டும் இன்றி தனது குரலிலும் காந்தகத்தை வைத்திருக்கும் நாயகி கீர்த்தி சுரேஷுக்கு, முதல் பாதியில் தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த காந்த கண்ணழகி ரசிகர்களை கவரும் காட்சிகள் படத்தில் குறைவே.
காம்பினேஷன் காமெடியனான சூரி, தனக்கு ஏற்ற ஹீரோ கிடைத்தால் புல் ஜார்ஜ் பெற்றுவிடுவார். அப்படி அவர் இதற்கு முன்பு சிவாவுடன் சேர்ந்து அடித்த லுட்டியில் இருந்த பியூட்டி இந்த படத்தில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
’கிராமத்து இசையின் ராஜா’ அல்லது ‘மொலோடி கிங்’ என்று பட்டம் வாங்காமல் டி.இமான் ஓயமாட்டார் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய அனைத்துப் பாடல்களிலும் ஃபோக் ஸ்டைல் நிறைந்திருக்கிறது. அவருடைய முந்தையப் பாடல்களை நினைவுப் படுத்தும் விதமாக இந்த படத்தின் பாடல்கள் இருந்தாலும், அவை கேட்கும்படியும் முனுமுனுக்க வைக்கும்படியாகவே இருக்கிறது.
படம் முழுவதையும் ரங்கோலியைப் போல ரொம்ப கலர்புல்லா எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம்.
தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற பார்மெட்டில் தொடர்ந்து படங்கள் வருவது இயல்பு தான். அந்த வகையில் தனது முதல் படத்தின் பார்மெட்டில் இந்த படத்தையும் இயக்கியுள்ள பொன்ராம், மதுரையில் உலாவும் மாமூல் தாதாக்களைப் பற்றி காமெடியாக சொல்லியிருக்கிறார்.
திரைப்படங்களில் காட்டுவதைப் போல மதுரை அப்படிப்பட்ட ஊர் இல்லை, என்று கூறி படத்தை தொடங்கிவிட்டு, இங்கே அப்படியும் இருக்கிறார்கள், என்ற ரீதியில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய விதம், பொன்ராமின் காமெடியிலும் ஒரு கலவரத்தைக் காட்டியது. ஆனால், அந்த கலவரக் காட்சிகளையும் காமெடியாகவே சொல்லி, பழைய சாதத்தை மீண்டும் ஆவிப்போட்டு பதமாக கொடுத்திருக்கிறார் பொன்ராம்.

Comments