விருது வாபஸ் பிரபலங்களுக்கு எதிராக அனுபம் கெர் பேரணி!!!

Friday, November 6, 2015
Chennai:விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பிரபல நடிகர் அனுபம் கெர் தலைமையில் பேரணியாக சென்று, ஜனாதிபதியிடம் மனு அளிக்கின்றனர்.

 நாட்டில் மத சகிப்பின்மை அதிகரித்து வருவதாக கூறி, எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்படத் துறையினர், விஞ்ஞானிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட உயரிய விருதுகளை அரசிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.இப்படி விருதை திரும்ப ஒப்படைப்பது, நாட்டுக்கு செய்யும் அவமானம் என்றும், உலக அளவில் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் இந்த நிகழ்வை தடுக்க வேண்டும் என்றும், வேறு சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை, பிரபல இந்தி நடிகர் அனுபம் கெர் தலைமையில், நுாற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள், டில்லி ஜன்பத்தில் இருந்து, ஜனாதிபதி மாளிகை வரை, பேரணியாக சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு அளிக்கின்றனர்.

பேரணியில், கஜல் பாடகர் - அனுப் ஜலோட்டா, சாஸ்திரீய இசை கலைஞர் - உஸ்தாத் வசீபுத்தீன் டாகர், திரைப்பட இயக்குனர்கள் - பிரியதர்ஷன்; நிதின் தேசாய்; நீரஜ் வோஹ்ரா, நடிகர் - விவேக் ஓபராய், எழுத்தாளர் - நரேந்திர கோஹ்லி, மற்றும் கவிஞர் கஜேந்திர சோலங்கி பங்கேற்கின்றனர்.

இந்த பேரணிக்கு ஆதரவாக, பத்ம விருது பெற்ற கலைஞர்களான, பிர்ஜூ மஹராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சவுரசியா, பண்டிட் ராஜன் மிஸ்ரா, சோனல் மான்சிங், சரோஜ் வைத்யநாதன், பிரசூன் ஜோஷி, திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், நடிகர் கமல் ஹாசன் ஆகியோர் மனுவில் கையெழுத்திட்டாலும், பேரணியில் பங்கேற்கவில்லை.

திருப்பி அளிக்கிறார் அருந்ததி ராய்

சகிப்பின்மைக்கு எதிராக விருதை திருப்பி அளிப்போர் பட்டியலில், 'புக்கர் விருது' பெற்ற, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயும் இடம் பெற்றுள்ளார். 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' என்ற புத்தகத்துக்காக, புக்கர் விருதும், 1989ல், 'இன் விச் ஆன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்' என்ற படைப்புக்காக, சிறந்த திரைக்கதைக்காக தேசிய விருதும் பெற்ற, அருந்ததி ராய், சிறந்த திரைக்கதைக்காக வழங்கப்பட்ட தேசிய விருதை, திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், குந்தன் ஷா, சயீத் மிர்ஸா உள்ளிட்ட ௨௪ திரைப்பட இயக்குநர்கள், தாங்கள் பெற்ற தேசிய விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.

Comments