கல்யாணத்தைக் கலாய்க்கும் படம்!!!

24th of October 2015
சென்னை:கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் விஷயம் என்றாலும் அது  முக்கிய நிகழ்வு. எனவே அதற்கு விரும்பியபடி செலவு செய்யலாம் தப்பில்லை என்பது ஒரு கருத்து .மனைவியை நன்றாக வைத்துக் கொள்வது வேறு . கல்யாண நிகழ்ச்சிக்கு காசை இறைப்பது வேறு. ஒரு போட்டோ ஆல்பம் வீடியோ ஆல்பத்தில் முடிந்து போகும் ஒரு நாள் கூத்துக்கு பெரும் செலவு  தேவை இல்லை என்பது இன்னொரு கருத்து.
 
இந்த இரண்டு கருத்துக்களின் அடிப்படையில் கல்யாணத்தைக் கலாய்க்கும் வகையில் உருவாகி இருக்கும் ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார் , நாயகன் அட்டகத்தி தினேஷ், நாயகி நிவேதா ,மதன்கார்க்கி , பாலா சரவணன் , கே.வி.ஆனந்த, மோகன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
படத்தின் பாடல்  வெளியீட்டு விழாவில் முதலாவதாக பேசிய கவிஞர் மதன் கார்க்கி “இந்தப் படத்தில் நான் எழுதிய பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றாலும் இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான ’அடியே அழகே’ பாடல் சமீப காலத்தில் நான் கேட்ட பாடல்களில் மிக சிறந்த பாடல் எனலாம்.
 
விவேக் மிக சிறந்த  பாடல் ஆசிரியர் எனக்கு அவருடைய பாடல் மிகவும் பிடித்தது.” என்றார் .
பாடலாசிரியர் விவேக் பேசியபோது “வாடி ராசாத்தி…’  பாடலை நான் முதன் முதலில் எழுதியபோது , பாடலாசிரியர் மதன் கார்க்கி என்னை ட்விட்டரில் சிறப்பாக வரவேற்றார். தனது  ஐந்து லட்சம் ட்விட்டர்வாசிகளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் “என்றார் .
 
படத் தொகுப்பாளர் சாபு ஜோசப் “நான் இந்த படத்தை மிகவும் ரசித்து படத்தொகுப்பு செய்தேன். நெல்சன் வெங்கடேசனுக்கு என்னிடம் இருந்து எப்படி நல்ல அவுட் புட் வாங்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவருடன் வேலை செய்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது” என்றார்.
 
அட்டகத்தி தினேஷ் தன் பேச்சில்  “நாம் செய்யும் வேலைகளை ரசித்து , காதலித்து செய்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது என்னுடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் கதையை கேட்கும் போதே நெல்சன் வெங்கடேசன் அவர்களுக்காக இந்த கதையில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். இப்போது படத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார்.
 
நாயகி ரித்விகா பேசியபோது “முதலில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கதை சொல்ல என்னை அணுகும் போது , நான் அவருக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. பிறகு இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது எனக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.
 
இந்த படத்தில் நான் பண்பலை  ஆர்.ஜே வேடமேற்று நடித்துள்ளேன். எனக்கு இது முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. அதை கண்டிப்பாக நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள்” என்றார்.
இயக்குநர் மோகன் ராஜா பேசியபோ து “நான் தனி ஒருவன் படத்தை ஆரம்பிக்கும் போது நிறைய இசையமைப்பாளர்களை பரீசீலனையில் வைத்திருந்தேன். அதில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் பெயரும் இருந்தது.
 
அப்போதிருந்தே அவரை பற்றி யாரிடம் கேட்டாலும் நல்ல விதமாகவே கூறினார்கள். இந்த படத்தின் பாடல் நன்றாக இருக்கிறது என்றார்.
 
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசியது “எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. என்னை என்னுடைய அம்மாவும் நான் கல்வி கற்ற பள்ளியும் தான் இந்த அளவுக்கு வளர்த்துள்ளது.
நான் எடுத்திருப்பது இந்த உலகம் முழுவதற்கும் பொருந்தும் ஒரு கதை. நிச்சயம் இது மக்களை நல்ல விதமாக சென்றடையும்”என்றார்.

Comments