கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள் - நடிகர் சங்கத்திற்கு சூர்யா கோரிக்கை!!!

23rd of October 2015
சென்னை:நடந்து முடிந்த நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, கடமைகளை உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள், என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரசாரத்தில், வருந்ததக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக்கும்போது செய்த ‘கடமைகள்’, ‘உதவிகளாக’ சித்தரிக்கப்பட்டன.
‘நடிகர்கள் ஒரே குடும்பம்’ என்று சொல்லிக் கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர்.
விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது ‘பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.
வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள்.
மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறை வேற்றுங்கள்.
பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சக கலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் சூர்யா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments