ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா!!!

20th of September 2015
சென்னை:புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்பில் உள்ளவரின் கடைசி ஆசையை, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா நிறைவேற்றியுள்ளார்.

சென்னை, அம்பத்துாரை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், 44, திருமணம் ஆகாதவர்; உடன் பிறந்தவர்கள், மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். மூன்று மாதங்களுக்கு முன், தொடர் இருமலால், ரவிச்சந்திரன் அவதிப்பட்டார். பரிசோதித்ததில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குணப்படுத்த முடியாத அளவுக்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். தற்போது, ரவிச்சந்திரன் மரணத்தின் விளிம்பில் உள்ளார். இந்நிலையில், 'உன் ஆசை என்ன?' என, ரவிச்சந்திரனிடம் அவரது உறவினர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'இசையமைப்பாளர்
இளையராஜாவை சந்திக்க வேண்டும்' எனக் கூறினார்.
இந்த விஷயம் இளைய ராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும், ரவிச்சந்திரனை சந்திக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று சென்னையில் உள்ள, 'பிரசாத் லேப்'பில், இளைய ராஜாவை சந்தித்தார் ரவிச்சந்திரன். அவருடன் கண்ணீர் மல்க சிறிது நேரம் பேசினார். '20 ஆண்டுகளாக, உங்களின் தீவிர ரசிகனாக உள்ளேன்.
'ஜனனி ஜனனி...' பாடல் முதல், பல, 'மெலடி' பாடல்களை விரும்பி ரசிப்பேன். உங்களை சந்தித்தது பெரும் பாக்கியம்' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

பின், செய்தியாளர்களிடம் ரவிச்சந்திரன் கூறியதாவது:எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது; அதிகமாக புகைப்பிடிப்பேன். அதனால், இந்த நோயால் அவதிப்படுகிறேன். சிறியவர்கள், பெரியவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட தவறான பழக்கங்களை நிறுத்தி விடுங்கள். இல்லையென்றால், பின்னாளில் அது உங்களது உயிரை குடித்து விடும். அந்த கஷ்டத்தை அனுபவித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.
இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

Comments