யட்சன் - விமர்சனம் - தமிழில் மட்டுமே ‘யட்சன்’ வெளியாகும் ரகசியம் என்ன..?!!!

12th of September 2015
சென்னை:விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘யட்சன்’ . ஆர்யா, கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மை.. அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதும் உண்மை. முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.

படத்தில் ஆர்யா வரும் காட்சிகள் அனைத்தும் சிகப்பு நிற டோனிலும், கிருஷ்ணா வரும் காட்சிகள் அனைத்தும் நீல நிற டோனிலும் வரும். ஆனால் கண்டிப்பாக அது ரசிகர்களின் கவனத்தை சிதைக்காது என்கிறார் விஷ்ணுவர்தன். இன்னொரு முக்கியமான விஷயம் யட்சனை வேறு எந்த மொழிகளிலும் வெளியிட போவதில்லையாம். காரணம் படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட உள்ளோராம் விஷ்ணுவர்த்தன்....

தொடர்கதையிலிருந்து திரைக்கதை வடிவம் பெற்றிருக்கிறது ‘யட்சன்’. விஷ்ணுவர்தன், ஆர்யா, கிருஷ்ணா கூட்டணி என்ன செய்திருக்கிறது?

கதைக்களம்

ஒருவரைத் தொட்டால், அவருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அபாயத்தை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருக்கிறார் தீபா சன்னிதி. அவரை கொலை செய்யச் சொல்லி ரௌடி ஆர்யாவுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இன்னொருபுறம் நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் தன் திறமையைக்காட்டி எஸ்.ஜே.சூர்யா படத்தில் நாயகன் வாய்ப்பையும் பெறுகிறார். ஹீரோ அறிமுக விழாவில், கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஆர்யாவும், தீபா சன்னிதியை கொலை செய்யும் பிளானில் ஆர்யாவுக்குப் பதில் கிருஷ்ணாவும் மாறிவிட மொத்த கதையும் தலைகீழாக மாறுகிறது. அதன்பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பதே இந்த ‘யட்சன்’.

படம் பற்றிய அலசல்

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘தனி ஒருவன்’ படத்தின் கதாசிரியர்களான சுபாவின் கைவண்ணத்தில் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘யட்சன்’ தொடர்கதையையே படமாக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் இக்கதையை, காட்சிகளாக மாற்றுவதில் ரொம்பவே தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் முன்பாதியில் கதைக்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளுடன் நகர்ந்து இடைவேளையில்தான் தனக்கான ரூட்டையே பிடிக்கிறது ‘யட்சன்’. இரண்டாம்பாதியிலாவது செல்ல வேண்டிய இடத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்த்தால், திக்கு திசையில்லாமல் நகர்கிறது திரைக்கதை. முடிவில், ஒரு மொக்கையான ட்விஸ்ட்டுடன் (இதையெல்லாம் சீரியல் பார்ப்பவர்களே கண்டுபிடித்துவிடுவார்கள்) என்ட் கார்டு போடுகிறார்கள். அதிலும் இதுபோன்ற க்ளைமேக்ஸையெல்லாம் தமிழ் சினிமா மறந்து 20 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

‘சப்’பென்று நகரும் படத்தில் ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள் தம்பி ராமையாவும், ஆர்.ஜே.பாலாஜியும். யுவனின் இசை, ஓம் பிராகாஷின் ஒளிப்பதிவு போன்றவையே படத்தின் ஒரே ஆறுதல்.

நடிகர்களின் பங்களிப்பு

ஆர்யா, கிருஷ்ணா இருவருக்குமே சமவாய்ப்புள்ள கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கான சவாலான காட்சிகள் எதுவும் இல்லை. அந்தந்த கேரக்டருக்குச் செய்ய வேண்டிய நியாயத்தை செய்திருக்கிறார்கள் ஆர்யாவும், கிருஷ்ணாவும். படம் முழுக்க வரும் சீரியஸ் தீபா சன்னிதியைவிட, ஒன்றிரண்டு இரடங்களில் வரும் சுவாதி ‘நச்’சென மனதில் பதிகிறார். அதிலும் கிருஷ்ணாவை அதட்டி, மிரட்டும் காட்சியில் அம்மணியின் ஆக்டிங் அதகளம்! பாடி லாங்குவேஜ் காமெடி செய்திருக்கிறார் தம்பி ராமையா. ஓரளவு வேலை செய்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி பேசிக்கொண்டே இருக்கிறார். ஒன்றிரண்டு இடங்களில் ரசிக்க முடிகிறது. அறிமுக வில்லன் அடில் ஹுசைன் பழைய சலீம் கௌஸை ஞாபகப்படுத்துகிறார்.

பலம்

1. இசை
2. ஒரு சில காமெடிகள்

பலவீனம்

திரைக்கதை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்

மொத்தத்தில்...

வார வாரம் ஒரு சின்ன சஸ்பென்ஸுடன் முடிந்து அடுத்த வார இதழுக்காக காத்திருக்கும் அளவுக்கு வெற்றிபெற்ற இந்த தொடர்கதை, எந்த இடத்திலுமே சுவாரஸ்யம் தராத 2 மணி நேரப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது. இது காமெடிப் படமா? இல்லை ஆக்ஷன் படமா? இல்லையென்றால் த்ரில்லர் படமா? என்ற குழப்பத்துடனே ரசிகர்கள் தியேட்டரைவிட்டு வெளியேறுகின்றனர்.

ஒரு வரி பஞ்ச் : யட்சன் - சுவாரஸ்யம் தராத குழப்பவாதி!

Comments