தம்பிராமையாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் 'அதாகபப்ட்டது மகாஜனங்களே!!!

6th of August 2015
சென்னை:இயக்குனரும், தேசிய விருது பெற்ற நடிகருமான தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல் படத்திற்கு 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா  ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் , மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் இன்பசேகர். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணீயாற்றாதவர். இருப்பினும் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். 

படம் குறித்து இயக்குனர் இன்பசேகர் கூறுகையில், "நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்கு போட்டாலும்  அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த கதைக்கருவை மையமாக வைத்து விறுவறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம் தான் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'.

வித்தியாசமான தலைப்புக்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரியவரும்." என்று தெரிவித்தவரிடம், நடிகர் தம்பிராமையாவின் மகன் எப்படி இந்த படத்திற்கு ஹீரோவானார் என்றதற்கு, "நான் இப்படத்தின் ஹீரோ தேர்வில் ஈடுபட்டிந்த போது உமாபதி வந்தார். அவருக்கு சில காட்சிகளை சொல்லி நடிக்க சொன்னேன், வசனம் கொடுத்து பேச சொன்னேன், அவர் அனைத்தையும் சரியாக செய்ததால் தேர்வு செய்தேன். அதுவரை அவர் தம்பிராமையாவின் மகன் என்பது எனக்கு தெரியாது. அதன் பிறகு அவரிடம் நல்லா நடிக்கிற, எங்கேயாவது பயிற்சி எடுத்துக்கொண்டியா என்றபோது தான், அவர் தன்னை தம்பிராமையாவின் மகன் என்று சொன்னார். 

பிறகு நான் தம்பிராமையா சாரிடம் இந்த படத்தின் கதையை சொன்னேன். கதையை கேட்ட அவர் கண்டிப்பாக வெற்றி, என்று சொன்னதோடு சரி மற்றபடி கதையில் எந்த தலையீடும் செய்யவில்லை." என்று தெரிவித்தார்.

சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ரமேஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Comments