சந்தானத்துக்கு சம்பள பாக்கி 'வாலு' விவகாரம் அம்பலம்!

20th of August 2015
சென்னை:வாலு' படத்தின் ரசிகர் காட்சி தாமதம் ஆனதற்கு, நடிகர் சந்தானத்தின் சம்பளப் பாக்கி தான் காரணம் என, தெரிய வந்துள்ளது. சிம்பு - ஹன்சிகா நடித்த, 'வாலு' திரைப்படம், பல தடைகளை தாண்டி, கடந்த 14ம் தேதி வெளியானது. சிம்பு ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி, அன்று காலை, 8:00 மணிக்கு, சில தியேட்டர்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தில், சிறப்புக் காட்சி திரையிடவில்லை. இதனால், சிம்பு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்தப் படத்தில் நடித்த சந்தானத்துக்கு, படம் வெளிவருவதற்கு முன், முழு சம்பளமும் கொடுக்கப்படும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், சந்தானத்துக்கு முழு சம்பளமும் கொடுக்கப்படவில்லை. இதனால், படத்தை தியேட்டர்களில் வெளியிடும் பணியை செய்து வரும், 'கியூப்' நிறுவனம், 'ரிலீஸ் ஆர்டர்' கொடுக்கவில்லை. இந்த தகவல், சிம்புவுக்கு தெரிந்தது. அதன்பின் தான், சந்தானத்தின் சம்பள பட்டுவாடாவை, தயாரிப்பாளர் முடிக்காதது தெரிய வந்தது. உடனே, சந்தானத்தை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேசினார்.

அப்போது
சந்தானம், 'இந்தப் பிரச்னை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உடனே நான் சம்மத கடிதம் அனுப்பி விடுகிறேன்; நீங்கள் தியேட்டருக்கு செல்லுங்கள்' என, கூறி இருக்கிறார்.
உடனே சம்மத கடிதம் எழுதிய சந்தானம், 'கியூப்' அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தார். அதன்பின் தான், காலை, 10:00 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

Comments