'எந்திரன் 2' படத்தின் வில்லனாக விக்ரம்: தயாரிப்பாளரை சம்மதிக்க வைப்பாரா ஷங்கர்?!!!

19th of July 2015
சென்னை:'எந்திரன் 2' படத்தின் வில்லனாக விக்ரம் நடிக்க, தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் முயற்சி செய்து வருகிறார்.
 
'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமாக 'எந்திரன் 2' என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'எந்திரன் 2'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். ஆனால் பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் வில்லனாக விக்ரம் நடித்தால் சரியாக இருக்குமா என்பதை தயாரிப்பு தரப்பு யோசிக்க வைத்திருக்கிறது.
 
எந்திரன் 2' படத்துக்கு சுமார் 320 கோடி ரூபாய் பட்ஜெட் என்று முடிவு செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். ரஜினி நாயகன் என்பது முடிவாகி விட்டாலும், பெரிய நாயகர் ஒருவர் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.
மேலும், ரஜினி என்ற பெயரை தவிர வில்லன், நாயகிகள் ஆகியோரை பாலிவுட்டில் இருந்து நடிக்க வைத்தால் சுமார் 5000 திரையரங்குகள் வரை வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
 
'எந்திரன் 2'வில் வில்லனாக நடிக்க விக்ரம் சம்மதித்து விட்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் விக்ரம் நடித்தால் சரியாக இருக்காது, அதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் யாரிடமாவது பேசுங்கள் என்று இயக்குநர் ஷங்கரை கேட்டுக் கொண்டுள்ளது. விக்ரம் நடித்தால் சரியாக வரும் என்று தயாரிப்பு நிறுவனத்தை சம்மதிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.
 
தற்போது இருக்கும் 'எந்திரன் 2' சூழ்நிலையைப் பார்த்தால் அமீர்கான், கமல் ஆகியோரைத் தொடர்ந்து விக்ரமும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பது போல தெரிகிறது.

Comments