அர்ப்பணிப்பு உள்ள நடிகர் அர்ஜூனா: ‘கங்காரு’ இயக்குநர் சாமியின் பாராட்டு!!!

19th of January 2015
சென்னை:சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும், பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர்தான்.
 
பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பெயர் கிடைக்கப் போவது வரவிருக்கும் ‘கங்காரு’ படத்தின் மூலம்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அர்ஜுனை தேர்வு செய்தது பற்றி சாமி சொல்லும்போது, “2006-ம் ஆண்டு நான் ‘உயிர்’ படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது படத்தின் ஒளிப்பதிவாளர் பவுசியாவின் மலையாளி நண்பர் அருண் எனக்கு பழக்கமானார். அந்த அருண் மூலம்தான் இந்த அர்ஜூன் எனக்கு அறிமுகமானார்.
 
நான் ‘சரித்திரம்’ படம் இயக்கியபோது கலாபவன் மணியின் மகனாக இவரை நடிக்க வைத்தேன் சிறு வேடமென்றாலும் அவரிடம் திறமை மட்டுமல்ல, சகிப்புத் தன்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் இருப்பதை அப்போதே கண்டேன்.
 
பிறகு ‘கங்காரு’ படத்தில் அண்ணன் வேடத்தில் நடிக்க வைக்க ஆறு மாதங்கள் நடிகர்களைத் தேடினோம். யாரை பார்த்தும் எனக்கு திருப்தியில்லை. கடைசியில் அர்ஜூனா நினைவுக்கு வர இவரையே ‘கங்காரு’ வில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்து விட்டேன். அவரது பெயரை நான்தான் அர்ஜுனா என்று மாற்றினேன்.
 
அப்போது ஒரு தயாரிப்பாளர் வந்து தன் மகனை அந்த ரோலில் நடிக்க வைக்க பத்து லட்சம் தருவதாகக் கூறினார். நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் நடிகனை மாற்ற மாட்டேன். என்று கூறித் திருப்பி அனுப்பிவிட்டேன். அந்த அளவுக்கு அர்ஜுனா மீது எனக்கு நம்பிக்கை வந்து இருந்தது. படப்பிடிப்புக்குப் போன பிறகு என் கருத்து சரியானதுதான் என்பதை நிரூபித்தார்.
 
அர்ப்பணிப்புள்ள அருமையான நடிகனாகத் தெரிந்தார். படப்பிடிப்பு பரபரப்பாக கொடைக்கானலில் நடந்து கொண்டிருந்தபோது அர்ஜுனாவின் காலில் அடிபட்டு அவரது கட்டை விரலின் நகம் உடைந்து விட்டது. வலியில் துடித்து விட்டார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு காலில் கட்டுப்போட்டுக் கொண்டே மரமேறும் காட்சி முதல் கயிறு கட்டி ஏறும் காட்சிவரை எல்லாவற்றிலும் தொடர்ந்து நடித்தார்.
 
படம் முழுக்க வெறுங்காலுடன்தான் நடந்து நடிக்க வேண்டும் இந்தக் கேரக்டர் அப்படித்தான் என்று சொல்லி வைத்திருந்தேன். அதனால் கால் தெரியாத காட்சிகளில் கூட காலில் செருப்போ, ஷூவோ அணிய மறுத்து விட்டார். அந்த அளவுக்கு அந்த கேரக்டரை நேசித்தார்.
 
நடிகனாக இருக்கும்போது ஷூ போடு. ஆனால் கேரக்டர் என்று வந்து விட்டால் அதுவாக மாற வேண்டும்.என்று நான் சொல்லியிருந்ததை மறக்கவில்லை அவர். ஆதி ‘மிருகம்’ படத்தில் நடிக்கும்போது காலில் எதுவுமே போடவில்லை. அதே ஆதி, ‘ஈரம்’ படத்தில் ஷூ போட்டார். இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. அந்தக் காலத்தில் வெட்டியான் கேரக்டர் வந்தால்கூட. ஜீன்ஸ், ஷூ எல்லாம் போட்டிருப்பார்கள்.
 
அந்த நேரத்தில் பச்சைத் தண்ணியில குளிக்கச் சொன்னாலும் குளிப்பார் அர்ஜூனா. கொடைக்கானலில் அப்போது கடுங் குளிர். பாதி நேரம் பனி மூட்டத்தால் கண்ணுகூட தெரியாது. படப்பிப்பு நடந்த இருபது நாட்களில் நாங்கள் எத்தனையோ முறை குளிர் போக்க தீ மூட்டி அமர்ந்திருக்கிறோம். ஆனால் ஒரு முறைகூட அர்ஜுனா குளிர் காய வந்ததில்லை. அப்படி குளிர் காய வந்தால் அடுத்த சீனில் நடிக்கும்போது நடுங்கும் என்பதால் அவர் அந்த குளிருக்கு தன்னை பழக்கப்படுத்தினார். டெடிக்கேசன் டு த கோர் இஸ் அர்ஜுனா.
 
எனக்கு கேரக்டர்தான் முக்கியம். அர்ஜுனா அந்த அளவுக்கு அர்ப்பணிப்புள்ள நடிகன். மொழிதான் கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. மலையாள வாசனை இருப்பதால் டப்பிங் குரல் பயன்படுத்தி இருக்கிறோம்..” என்று கூறினார் இயக்குநர் சாமி.

Comments