சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து சங்கீத சாம்ராட்டாக திகழும் ஜேசுதாஸ்!!!

13th of January 2015
சென்னை:1961ஆம் சினிமாவில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், இந்திய அரசிகர்கள் அனைவரையும் தனது குரலுக்கு அடிமையாக்கினர். திரை இசை பாடல்கள் மட்டும் இன்றி கர்நாடக சங்க்கீதத்தாலும், அனைவரையும் கவர்ந்த இவர், மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தனது இசையின் மூலம் பல்வேறு மத கடவுள்களுக்கு ஆராதனை செய்தார்.

17 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள கே.ஜே.ஜேசுதாஸ், ஜனவரி 10ஆம் தேதி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடினார். அதே சமயம் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்து, இன்னமும் அதே வசீகரிக்கும் தனது குரலினால், இசை ரசிகரளை மயக்கி வரும் அவர், தற்போதுள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வருகிறார்.

கட்டசேரி ஜோசப் யேசுதாஸ், கேரள மாநிலம் கொச்சியில் 1940ஆம்  ஆண்டு ஜனவரி 10ஆம்  தேதி பிறந்தவர். இவரது தந்தை அகஸ்டின் ஜோசப், பிரபல பாடகராகவும் மேடை நடிகராகவும் விளங்கியவர். மூத்த மகன் யேசுதாசுக்கு சிறு வயதிலேயே இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். கர்னாடக இசையின் அடிப்படையான விஷயங்களை தந்தையிடம் இருந்தே கற்றுக் கொண்ட யேசுதாஸ், பின்னர் குஞ்சன் வேலு ஆசான், பி.எக்ஸ்.ஜோசப், சிவராமன் நாயர், ராமகுட்டி பாகவதர், கே.ஆர்.குமாரசாமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்யநாத பாகவதர், பல்லவி நரசிம்ம ஆச்சாரியா ஆகியோரிடன் இசை பயின்றார்.

கொச்சி, செயிண்ட் செபாஸ்டியன் உயர்நிலைப்பள்ளி மாணவனாக இருந்தபோதே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டு பரிசுகளை வென்றார். மாநில அளவிலான இளைஞர் விழாவில் கர்நாடக வாய்ப்பாட்டு பிரிவில் முதல் பரிசு வென்றது, இவரது இசைத் திறனை பெரிய அளவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எர்ணாகுளத்தில் 1958ல் நடந்த கேரள கத்தோலிக்க இளைஞர் விழாவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொச்சின் அருகே திரிப்புனித்துராவில் உள்ள ஆர்.எல்.வி.மியூசிக் அகடமியில் சேர்ந்து கானபூஷனம் பாடப் பிரிவில் சேர்ந்து பயின்று, சிறந்த மாணவராக டபுள் புரமோஷனுடன் தேர்ச்சி பெற்றார். மேற்படிப்புக்காக, திருவனந்தபுரம் ஸ்ரீ சுவாதித் திருநாள் மியூசிக் அகடமியில் சேர்ந்தவர், குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் போனது.

1961ல் முதல் முறையாக திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல கவிஞர் ஸ்ரீ நாராயண குரு எழுதிய ’ஜாதி பேதம் மத துவேஷம் ஏதுமில்லா’ என்ற அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது (படம்: கால்பாடுகள்). அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து தரப்பினரையும் தனது கம்பீரமான இனிய குரலால் கவர்ந்திழுத்த யேசுதாஸ், கேரளா
மட்டுமில்லால் இந்தியா முழுவது பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக தனது முத்திரையைப் பதித்தார்.

தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக "நீயும் பொம்மை, நானும் பொம்மை"
என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது. 1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். முதல் இந்தி மொழிப்பாடல் "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் இந்திப் படமாக "சோடிசி பாத்" அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், என்.டி.ராமாராவ், அமிதாப், சஞ்சீவ் குமார், சத்யன், பிரேம் நசீர், மம்மூட்டி,
மோகன்லால் உள்பட இந்தியாவின் பிரபல நடிகர்கள் பலருக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.
 
1968ல் சோவியத் அரசின் அழைப்பின் பேரில் கலாசாரத் தூதராக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கஜகஸ்தான் வானொலியில் இவர் பாடிய ரஷ்ய மொழிப் பாடல் அந்நாட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (2001), சிட்னி ஓபரா ஹவுஸ் (2006) அரங்குகளில் இசை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்தது.

1965ல் இந்தியா - சீனா இடையே போர் நடந்தபோது, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டியவர், டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அதை நேரில் வழங்கி அவரது பாராட்டுகளைப் பெற்றார்.

தமது திரைவாழ்வில் வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்து இசைப் பயணத்தை தொடர்ந்து வரும் அவர் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், ரஷ்யன், அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 50,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி ஈடு இணையற்ற சாதனையாளராக விளங்கி வருகிறார்.

சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் என்ற வகையில், 7 முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். 1975 -ல் பத்மஸ்ரீ விருதும் 2002 -ல் பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.
திரையிசையுடன்,கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார்.

சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார். அரை நூற்றாண்டுகள் கடந்தும் இந்த கான கந்தர்வனின் இசைப் பணி இனிதே தொடர்கிறது.

போகாத நாடில்லை, பாடாத மொழியில்லை, பெறாத விருதில்லை எனும் வகையில் இவரது சாதனை சரித்திரம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு அள்ள அள்ளக் குறையாத இசைப் புதையலாய் விளங்குகிறது.

ஜேசுதாஸ் பெற்ற விருதுகள் மற்றும் பட்டங்கள்  விபரம்:
* கான கந்தர்வன் - 1968, கேரள மகாகவி ஸ்ரீ.ஜி.சங்கர குருப் வழங்கி கவுரவித்தார்.

* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான கேரள மாநில விருது - 1969 (24 முறை பெற்றுள்ளார். பல்வேறு மாநிலங்கள் சார்பாக மொத்தம் 45 முறை).

* சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது - 1972, 1973, 1976, 1982, 1987, 1988, 1991.

* பத்மஸ்ரீ - 1975

* கலைமாமணி - 1986

* அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் - 1986

* லதா மங்கேஷ்கர் விருது - 1993

* தேசிய குடிமகன் விருது - 1994, அன்னை தெரசா வழங்கி கவுரவித்தார்.

* சங்கீத கலா சிகாமணி - 2002, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, சென்னை.

*பத்மபூஷண் - 2002

* ரஞ்சனி சங்கீத கலா ரத்னா - 2002

* சப்தகிரி சங்கீத வித்வான்மணி - 2002, ஸ்ரீ தியாகராஜசுவாமிவாரி கோயில் அறக்கட்டளை, திருப்பதி.

* உடுப்பி ஆஸ்தான வித்வான் - 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சார்பில் வித்யாதீஷ சுவாமிகள் வழங்கினார்.

* சுவாதி ரத்னம் விருது - 2002, சென்னை மலையாள கிளப்.

* சங்கீத கலா சுதாகரா - 2002, உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்.

* கொரம்பயில் அகமது ஹாஜி அறக்கட்டளை விருது – மத நல்லிணக்கத்தை பரப்பியதற்காக - 2003.

* ஜே.சி.டேனியல் விருது - 2003, மலையாள திரைப்பட பணியில் வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக, கேரள அரசு வழங்கி கவுரவித்தது.

* குட்டிகுரா கேலோபோல் விருது - 2004, வனிதா இதழ் சார்பில் வழங்கப்பட்டது.

* வாழ்நாள் சாதனையாளர் விருது - 2004, பிலிம்பேர் சார்பில், நேரு ஸ்டேடியம் - சென்னை.

* விஸ்டம் சர்வதேச விருது - 2005

* வாழ்நாள் சாதனையாளர் விருது - 2005, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வட இந்திய திரைத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

* சிறந்த பின்னணிப் பாடகருக்கான ஆந்திர அரசின் நந்தி விருது - 2006.

* உதயஷங்கர் நினைவு பிலிம் விருது - 2006, கன்னட சித்ரா சாகித்ய ரத்னா ஸ்ரீ உதயஷங்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

* கவுரவ உறுப்பினர் அந்தஸ்து - 2008, வான்கூவர் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா, கனடா.

* பிலிம்பேர் விருது - 2009

* மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் - 2009.

* கேரள சங்கீத நாடக அகடமி விருது - 2010.

* சிஎன்என் ஐபிஎன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது - 2011, டெல்லி.

* பெப்கா அம்ரிதா பிலிம் விருது - 2011

* ஹரிவராசனம் விருது - 2012, சபரிமலை சந்நிதானம்.

* லிம்கா சர்வதேச விருது - 2012, ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு.

Comments