முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த, சென்னையில் உள்ள, சர்ச் பார்க் பள்ளியில், நடிகை தேவயானி, ஆசிரியை!!!

4th of December 2014
சென்னை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த, சென்னையில் உள்ள, சர்ச் பார்க் பள்ளியில், நடிகை தேவயானி, 40, ஆசிரியையாக பணியாற்றுகிறார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழ் திரையுலகில், 1993ல், 'தொட்டா சிணுங்கி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். ஏராளமான தமிழ் படங்கள், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 'டிவி' தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த ஆண்டு வெளியான, 'திருமதி தமிழ்' படத்திற்கு பிறகு, புதிய படங்களில் நடிக்கவில்லை. 'டிவி' தொடர்களில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். இவரது கணவர் ராஜகுமாரன்; திரைப்பட இயக்குனர். இந்த சூழ்நிலையில் தான், சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில், அவர் ஆசிரியையாக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியானது.

இது குறித்து, நடிகை தேவயானிடம் பேசியபோது, பதில் சொல்ல தயங்கினார். ''வெளியில் தெரிய வேண்டாம் என, நினைத்தேன். பதில் சொல்லாவிட்டால், கோபித்துக் கொள்வீர்கள். நடிகை ஆசிரியை ஆக கூடாதா,'' என, கேட்டார்.

பின்னர் தயக்கத்தை உதறி தள்ளி, நடிகை தேவயானி கூறியதாவது: மும்பையில், செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்த போது, ஆசிரியை ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், சினிமா வாய்ப்பு வந்ததால், ஆசிரியை கனவு நிறைவேறவில்லை. தற்போது, எனக்கு படம் இல்லை; 'டிவி' தொடர் தயாரிப்பும் இல்லை. என் குழந்தைகள், இனியா, பிரியங்கா, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் படிக்கின்றனர். தினமும், இருவரையும் நான் தான், பள்ளிக்கு அழைத்து செல்வேன். அங்கு, ஆசிரியைகள் அன்பாக, நட்பாக பழகுவதையும், அமைதியான சூழ்நிலை நிலவுவதையும் பார்த்தேன்.

 
நாமும் ஆசிரியையாக இருந்தால், மனதுக்கு இதமாக இருக்கும் என, நினைத்துப் பார்ப்பேன். பாடம் நடத்த, போதுமான ஆங்கில அறிவு, எனக்கு உண்டு. இருந்தாலும், தற்போதைய பாடத் திட்டத்தில், எந்த முறையில், எளிதாக நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்பது முக்கியம். தனியார் நிறுவனத்தில், ஆசிரியர் பணிக்கான, சிறப்பு பயிற்சி எடுக்க விரும்பி, சர்ச் பார்க் பள்ளி முதல்வரிடம் அனுமதி கேட்டேன்; கிடைத்தது; சில நாட்கள், கற்பித்தல் பயிற்சி எடுத்தேன். நான் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டதை, பள்ளி முதல்வர் பார்த்தார். 'பாடம் நடத்த விரும்பினால், நேரம் கிடைக்கும் போது வாருங்கள்; அனுமதிக்கிறேன்' என, தெரிவித்தார்.

தற்போதைய பாடத்திட்டத்தில், நான்காவது வகுப்பு வரை என்னால் பாடம் நடத்த முடியும். தற்போதைய நிலையில், நான் முழுநேர ஆசிரியையாவது சிரமம். அவ்வப்போது, பள்ளி முதல்வரின் அனுமதியுடன் சென்று பாடம் நடத்த முடிவு செய்துள்ளேன். சினிமாவில், எனக்கு எல்லாமும் கிடைத்தது. ஆனால், அமைதியாக இருக்க முடியாது. சர்ச் பார்க் பள்ளியை, ஒரு பள்ளியாக மட்டும் நான் நினைக்கவில்லை. அறிவாலயமாகவே பார்க்கிறேன். இங்கு, எனக்கு பாடம் நடத்த கிடைத்த அனுமதியை, பெரிய சந்தோஷமாகவே நினைக்கிறேன். இவ்வாறு, நடிகை தேவயானி கூறினார். சர்ச் பார்க் பள்ளியில் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments