விளையாட்டு முதலாளிகளான கோலிவுட் நடிகர்கள்!!!

2nd of December 2014
சென்னை::திரைப்படம், விளம்பரப் படம் உள்ளிட்டவைகளில் நடிப்பதை தவிர்த்து, நடிகர் நடிகைகள் ஸ்டார் நைட் என்ற கலை நிகழ்ச்சியிகளில் கலந்துகொள்வதில் ஈடுபாடு காட்டுவார்கள். மார்கெட் இழந்த நடிகர் நடிகைகளுக்கு சில நேரங்களில் இதுபோன்ற வெளிநாடுகளில் நடக்கும் ஸ்டார் நடைட் கலை நிகழ்ச்சிகள் கை கொடுக்கும்.

ஆனால், தற்போது இந்த ஸ்டார் நைட்டுகளுக்கு பதிலாக, விளையாட்டுப் போட்டிகள் பிரபலமாகி வருகிறது. கோலிவுட், பாலிவுட், டாலிவுட் உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியான செலிபிரேட்டி கிரிக்கெட் லீக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது பேட்மிண்டன் விளையாட்டின் மீது நட்சத்திரங்களின் பார்வை பட்டுள்ளது.


நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே, நட்சத்திர பேட்மிண்டன் போட்டி ஒன்றை, க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. எஸ்.பி.எல் (SBL) எனப்படும் 'ஸ்டார் பேட்மிண்டன் லீக்'( Star’s Badminton League) என்ற தலைப்பில் 2015ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் இடம்பெரும் அணிகளை நடிகர்கள் பரத், ஷாம், ஸ்ரீகாந்த் ஆகியோர் வாங்கியுள்ளனர்.

மொத்தம் இப்போடியின் மூன்று அணிகள் இடம்பெறுகிறது. அதில், ‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்’ (Chennai Flickers) என்ற அணியை நடிகர் ஸ்ரீகாந்தும், 'சென்னை ஸ்மாஷர்ஸ்'(Chennai  Smashers) என்ற அணியை நடிகர் பரத்தும், 'சென்னை ராக்கெட்ஸ்'  (Chennai Racquets) என்ற அணியை நடிகர் ஷாமும் வாங்கியுள்ளனர். இதன் மூலம் இந்த மூன்று கோடம்பாக்க நடிகர்களும் விளையாட்டு முதலாளிகளாகியுள்ளனர்.

இந்த நட்சத்திர பேட்மிண்டன் போட்டியின் அறிமுக விழா நேற்று மாலை, சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் நடைபெற்றது. ஆட்டம், பாட்டு என்று கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேட்மிண்டன் அணியினரும், அந்த அணியினர் அணியும் டி-சர்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சென்னை ஃப்ளிக்கர்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்ரீகாந்த் பேசுகையில், “இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கணேஷ் தான் ஒரு செயல் வீரர் என்று நிரூபித்து இருக்கிறார். இன்று மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப்படுவது விளையாட்டு தான், எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டு தான். கிரிக்கெட் வளர்ந்து விட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம் முயற்சி வரவேற்புக்குரியது.

இது ஒரு ஆரம்பம் தான். பெரிய கட்டடத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்துவைக்கப் பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்,வளரும். மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள் தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும். நட்சத்திரங்களை வைத்து ஸ்டார் நைட் போன்ற விழாக்கள் வைப்பதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும்." என்றார்.

சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் பரத் பேசுகையில், “கிரிக்கெட் எனக்குப் புதுசில்
லை. ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித்தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும், வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும்.” என்றார்.

சென்னை ராக்கெட்ஸ் அணியின் உரிமையாலர் நடிகர் ஷாம் பேசுகையில், “முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷுக்கு நன்றி. பாராட்டுகள். இவர் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார்.  சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோத விட்டார். பாண்டிச்சேரியில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். பிரம்மாண்டமாக  நடத்தினார். பிரமாதமாக வெற்றியும் பெற்றார்.

ஒரு சாரிட்டிக்காக அதில் வசூலானதை எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால் மூன்று பேருமே மறுக்காமல் ஒப்புக் கொண்டோம். ஏதோ நடித்தோம் போனோம் என்று இல்லாமல், நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும், நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும், என்று  நான் உடனே ஒப்புக் கொண்டேன். இதில் ஆடும் எங்களுக்குள் ஈகோ, பொறாமை எல்லாம் கிடையாது மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோம். இதில் விளையாடும் போது வயது குறைந்த உணர்வு, எங்களுக்குள் இருக்கிற சிறு பையனை வெளிக் கொண்டு வரும் உணர்வு வருகிறது." என்றார்.

இந்நிகழ்ச்சியின் முன்னோடிகளாக விளங்கும் நடிகை அனுராதா, அவரது மகள் அபிநயஸ்ரீ மட்டுமல்ல நடிகர்கள் பானுசந்தர் ,பவர்ஸ்டார்,அசோக்,ப்ருத்வி ,கிரண்,முன்னா, அருண், சரண், தருண், பிளேடு சங்கர்,  ஆரி, சூரி, பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் நிரோஷா,ஜெனிபர், மணிஷா, ஸ்வாதி, அலீஷா அப்துல்லா, சஞ்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, யாஷ்மித், சாரா ,பாடகர்கள் நவின், க்ரிஷ் ஐயர் ,இசையமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, தரண்குமார் ஆகியோரும் மேடையில் தோன்றி அணிகளை  ஊக்கமூட்டினர். நிறைவாக ரோஜா கணேஷ் நன்றி கூறினார்.  

இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரி மாதம் சென்னை, வடபழனி ஃபோரம் விஜயா மாலியில் நடைபெறுகிறது.

Comments