லிங்கா ஆடியோ வெளியீட்டில் ரசிகர்கள் ரகளையால் பரபரப்பு!!!

17th of November 2014சென்னை:ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். மேலும், ரஜினியின் ரசிகர்களும் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபடியால் இந்த நிகழ்ச்சியை மற்றொரு தியேட்டரிலும் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தது படக்குழு. அதனால், சத்யம் திரையங்க வளாகத்தில் இருக்கும் மற்றொரு திரையரங்கமான சாந்தம் திரையரங்கிலும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்தனர்.
 
இங்குதான் பத்திரிகையாளர்களுக்கும், ரஜினி ரசிகர்கள் சிலருக்கும் இருக்கைகள் அனுமதிக்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி தொடங்கி பல மணி நேரங்கள் ஆகியும், சாந்தம் திரையரங்கில் அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதிகூட திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
 
பொறுமை இழந்த சில ரசிகர்கள் படக்குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திரையரங்குக்குள் ரகளையில் ஈடுபட்டனர். ஒருசில ரசிகர்கள் தியேட்டரின் கதவை திறந்து வெளியே செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசாரின் உதவியோடு திரையரங்கு ஊழியர்கள் கட்டுப்படுத்தினர். இருந்தும் தொடர்ந்து ரசிகர்கள் கூச்சல் போட்டு வருகின்றனர்.
 
சத்யம் திரையரங்கில் இதுமாதிரி நடப்பது ஒருமுறை இரண்டு முறையல்ல. பலமுறை இதுபோல்தான் நடைபெற்று வருகிறது. பெரிய நடிகர்களின் சினிமா விழாக்களில் திரையரங்கு நிர்வாகம் எதையும் சரியாக செய்வதில்லை.
 
பல சினிமா விழாக்களை நேர்த்தியாகவும் செம்மையாகவும் செய்துவரும் சத்யம் திரையரங்கு நிர்வாகம், இதுபோன்ற பெரிய நடிகர்களின் சினிமா விழாக்களையும் வரும் காலங்களில் சரியாகவும், நேர்த்தியாகவும் நடத்தும் என நம்பலாம்

Comments