அப்புச்சி கிராமம்: திரை விமர்சனம்!!!

19th of November 2014
சென்னை:வானில் இருந்து விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும், அந்த கல் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தான் விழப்போகிறது என்றும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் எந்த இடத்தில் விழும் என்பது சரியாக தெரியவில்லை என்றும் அறிவிக்கிறது.

கல் எங்கே விழும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் இருக்க, அப்புச்சி கிராமம், என்ற ஊரில் விண்கல்லின் சிறு பகுதி ஒன்று விழுகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சியாக, இதே கல்லைப் போன்று, பல மடங்கு பெரிதாக உள்ள கல் ஒன்றும் தமிழகத்தை  நோக்கி வருவதாக அறிவிக்கும்  விண்வெளி ஆரார்ய்ச்சி மையம், இந்த கல் அப்புச்சி கிராமத்தில் விழ அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அந்த கல் விழும் தேதி மற்றும் நேரத்தையும் தெரிவிக்கிறது.

கல் விழுந்தாள் நாம் காலி, என்ற மன நிலையில் இருக்கும் அப்புச்சி கிராம மக்கள், தங்கள் உணர்வுகளை நகைச்சுவையாகவும், சோகமாகவும் வெளிப்படுத்தி வர, அதே ஊரில் இரண்டு காதல் ஜோடிகள், தங்களது காதல் சோகத்தில் வாடிவருகிறது. இறுதியில் கல் விழுந்ததா, அப்படி கல் விழுந்த பிறகு அப்புச்சி கிராமம் என்ன ஆனது, என்பது தான் கதை.

ஜொமல்லூரி, ஜி.எம்.குமார், மீரா கிருஷ்ணன், சிங்கம் புலி ஆகியோரைத் தவிர்த்து படத்தில் நடித்துள்ள அனைவர்களும் புதுமுகங்கள் தான். அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, இசை, கலை அமைப்பு என்று அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

அறிவியலை  மையமாக வைத்து காமெடி படம் இயக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த்  விஐ, காமெடியாக திரைக்கதையை உருவாக்கியிருந்தாலும், படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகளில் கோட்டை விட்டிருக்கிறார். கண்டதும் காதல், என்பதை ஏற்றுக்கொண்டாலும், அந்த காதல் கை கூடுவதை சொதப்பலாக சொல்லியிருக்கிறார்.

படத்தில் காமெடி சற்று ரசிக்கும்படியாக இருக்கிறது. அதிலும் செந்தில் பாணியில், கல்லை வைத்து, சிங்கம் புலியிடம் கேள்வி கேட்கும் அந்த காட்சி திரையரங்கையே சிரிப்பால் அதிரவைக்கிறது.

மொத்தத்தில் அப்புச்சி கிராமம், காமெடி கிராமமாக உள்ளது.

Comments