நாசரை அநாகரிகமகா பேசிய ராதாரவி; கொந்தளிக்கும் விஷால்!!!

10th of November 2014
சென்னை:எந்த துறையானாலும், அதில் எவ்வளவு பெரிய சீனியர் ஆனாலும் சரி.. பேசும் பேச்சில் நிதானம் வேண்டும். தன்னை எதிர்க்க ஆள் இல்லை.. தான் தான் எல்லாமே என நினைத்து ஆடியவர்கள் எல்லாம் ஆட்டம் கண்ட நிகழ்வுகளை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
 
இப்போது நடிகர் ராதாரவியும் கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருக்கிறார். அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால் அவர் பேசும் பேச்சுக்கள் அவருடைய அகம்பாவமான இன்னொரு பக்கத்தையே படம்பிடித்து காட்டுகிறது.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நாடக நடிகர்களுக்கான தீபாவளி உதவித்தொகை வழங்கும் விழாவில் சக சீனியர் நடிகர்களான விஜயகாந்த், நாசர் ஆகியோரை தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சித்த செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷ்ணு போன்ற இளம் நடிகர்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிலும் நாசரை 'போடா மயிறு' என்று சொன்னதாக ராதாரவி பெருமையடித்துக்கொண்ட வீடியோ காட்சிகளை கண்ட இளம் நடிகர்கள் இந்த அநாகரிக பேச்சிற்கு பதிலடி கொடுக்க முடிவுசெய்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் சங்கத்தில் உள்ள குறைபாடுகளை எப்போதுமே சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்கும் விஷால் ராதாரவியின் இந்தப்பேச்சால் மிகவும் சூடாகியிருக்கிறார்.
 
தற்போது கேரளாவில் கொச்சினில் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கும் விஷால் உடனடியா தொலைபேசி மூலம் நாசர் மற்றும் தன்னுடைய நண்பர்களான நடிகர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷ்ணு ஆகியோரிடம் ராதாரவியின் ஆபாச பேச்சை பற்றியும் அதற்கு தாங்கள் எவ்வகை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி ஆலோசித்துள்ளனர். அதன்பின்னர் அவர்களுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ராதாரவி மற்றும் காளை மீது, நடிகர் நாசர் ஏழு பக்க புகார் ஒன்றை நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரிடம் கொடுத்துள்ளார். கொச்சியில் உள்ள நடிகர் விஷால் மினஞ்சல் மற்றும் விரைவு தபால் மூலமாக ராதாரவி மற்றும் காளை மீது ஒரு பக்க புகாரை சரத்குமாருக்கு அனுப்பியுள்ளார்.
 
இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து உரிய பதிலோ நடவடிக்கையோ இல்லாவிட்டால் இதே புகாரை சட்ட ரீதியாக முன்னெடுத்துச்செல்லவும் நாசர் தலைமையிலான குழு தயாராகி வருகிறது. ஏற்கனவே நடிகர்சங்க பிரச்சனை ஒன்றில் விஷால் தலையிட்டு பிரச்சனையை கிளப்பியபோது இவர்தான் அடுத்து நடிகர்சங்க தலைவருக்கு பொருத்தமான நபராக இருப்பார் என ஒரு பேச்சு கிளம்பியது.
 
இளைஞர் பட்டாளமும் அவரை உற்சாகப்படுத்தியது. ஆனால் அப்போது நாகரிகம் கருதியும் சரத்குமார் தலைமையே தொடரட்டும் எனவும் கருதிய விஷால் அதற்கடுத்த தனது செயல்பாடுகளில் வேகத்தை குறைத்துக்கொண்டார். ஆனால் இப்போது ராதாரவியின் மரியாதையற்ற ஆணவப்பேச்சு விஷாலை மீண்டும் உசுப்பேற்றியுள்ளது.
 
நடிகர் விஷால் இன்று அல்லது நாளை இந்த பிரச்னையை சம்பந்தமாக தன்னுடைய கொச்சி படப்பிடிப்பிலிருந்து சென்னை வரவிருப்பதாக நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால் சென்னை வந்தவுடன் நடிகர்கள் நாசர், விஷால், ஆர்யா, விஷ்ணு மற்றும் பல இளம் நடிகர்கள் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அல்லது நடிகர் விஷாலின் வீட்டில் ஆலோசிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
 
சீனியர்களுக்கு மரியாதை கொடுத்து இதுவரை ஜூனியர்கள் அமைதியாக ஒதுங்கியிருந்தார்கள். இதே ரீதியில் போனால் விரைவில் இளவட்ட நடிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் நடிகர்சங்கம் வருவதை யாரும் தடுக்க முடியாது என்றே தெரிகிறது.

Comments