தயாரிப்பாளரை திருப்தி படுத்திய ‘வெள்ளக்கார துரை!!!

 23rd of November 2014
சென்னை:தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள  அன்புசெழியனின்  கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘வெள்ளக்கார துரை’.

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு யுகபாரதி, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்கள். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, எழிச்சூர் அரவிந்தன் வசனம் எழுதுகிறார். ரெமியன் கலையை கவனிக்க, தினேஷ், தினா ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொள்ள, கிஷோட் படத்தொகுப்பு செய்கிறார். ஜெயராஜ், ரஞ்சித் ஆகியோர் தயாரிப்பை நிர்வாகம் செய்ய, சங்கர்தாஸ் தயாரிப்பை மேற்பார்வையிடுகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி எஸ்.எழில் இயக்குகிறார். படம் குறித்து கூறிய எழில், “வெள்ளக்கார துரை படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம்.

”கூதக் காத்து கொல்லுதடி – கூரச்சேல தாடி...“ என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல் தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இதிலும் ஜாலியான படமாக வெள்ளக்கார துரை இருக்கும்.” என்றார்.

தயாரிப்பாளர் அன்பு செழியன் கூறுகயில், “ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது. நான் எதிர் பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன். முழு திருப்தியாக இருக்கிறது.” என்றார்.

Comments