தயாரிப்பாளர்கள் புகார் : நடிகை ஸ்ரீதிவ்யா மறுப்பு!!!

23rd of November 2014
சென்னை:வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா போன்ற படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா  நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘காக்கிசட்டை’, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைத்துரை, அதர்வாவுடன் ஈட்டி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே காட்டுமல்லி, நகர்புறம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த படங்களில் நடிக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதிவ்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் எல்லா படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. காட்டுமல்லி படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அதன் படப்பிடிப்பு திடீரென நின்று போனது.

படப்பிடிப்பு குழுவினரிடையே நடந்த குழப்பங்களால் படவேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதன்பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை. அதனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க போய்விட்டேன். ‘காட்டுமல்லி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments