கத்தி படத்திற்கு எதிர்ப்பு : சத்யம் திரையங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு!!!

21st of October 2014
சென்னை:'கத்தி’ பட விவகாரம் தொடர்பாக சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. லைகா நிறுவனமும், ஐங்கரன் கருணாமூர்த்தியும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர், என்று புகார் எழுந்தது. இதனால், கத்தி படத்திற்கு எதிராக பல புலிகள் சார்பு  அமைப்புகள் போர் கோடி உயர்த்தின. பிறகு, ராஜபக்சேவுக்கும் லைகா நிறுவனத்திற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று, அந்த நிறுவனத்தினர் விளக்கம் அளித்தனர்.


 இதையடுத்து பிரச்னை தீர்ந்தது. தற்போது தீபாவளி பண்டிகையன்று கத்தி படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறபட்டது. அதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றது.

இதற்கிடையில், கத்தி படத்திற்கு எதிராக மீண்டும் சில அமைப்புகள் பிரச்னையை எழுப்பியது. இதையடுத்து,  நேற்று படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டிய நிலையில் சிறிது நேரத்திலேயே நேற்று இரவு 11.45 மணியளவில் சென்னை ராயப்பேட்டை திரு.வி.க.சாலையில் உள்ள சத்யம் திரையரங்கின் மீது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரி தாக்குதல் தொடுத்தது. உருட்டுக்கட்டைகளால் தாக்கியதில் திரையரங்கின் முகப்பில் இருந்த அலங்கார கண்ணாடிகள் நொறுங்கின.

மேலும், திரையரங்க வளாகம் முழுவதும் அந்த மர்ம கும்பல் அடித்து நொறுக்கினர். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை திரையரங்கின் மீது வீசி, அந்த மர்மகும்பல் தப்பிச்சென்றனர். இதில் திரையரங்கு முன்பகுதி பயங்கர சேதமடைந்தது.

இதுகுறித்து அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘கத்தி’ படம் வெளிவரக்கூடாது என்று வலியுறுத்தி சிலர் இதில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments