லிங்கா படப்பிடிப்பில் விபத்து!!!

20th of October 2014
சென்னை:ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொண்ட ‘லிங்கா படப்பிடிப்பில் உயரமான இடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ரஜினி நடித்த ‘லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் மற்றும் வசன காட்சிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

வெளிநாட்டில் இந்த படத்தின் பாடல்காட்சிகளின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருசில காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்க இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் முடிவு செய்தார். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டது. நேற்று காலை படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது செட்டிற்கு மேலிருந்து ஆட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
5 மாடி உயரமுள்ள செட் மீது அமர்ந்திருந்த சுதர்சன் என்ற தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்தார். அதைக்கண்டு படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் சுதர்சன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் படுகாயம் அடைந்தார். உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுபற்றி டாக்டர் கூறும்போது,‘சிகிச்சைக்கு இளைஞர் நன்கு ஒத்துழைக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. உயரத்திலிருந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் தற்போது நடக்க முடியவில்லை என்றார்.

Comments