கண்ணதாசனுக்கு இணையான கவிஞன் இந்த உலகத்தில் கிடையாது - இளையராஜா!!!

17th of September 2014
சென்னை:கண்ணதாசனுக்கு இணையான கவிஞன் இந்த உலகத்திலேயே கிடையாது என்று நிகழ்ச்சி ஒன்றில், இசையமைப்பாளர் இளையராஜா பேசினார்.

கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறக்கட்டளை சார்பில், கண்ணதாசன் விழா காரைக்குடியில் நடைபெற்றது. கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியருமான பஞ்சு அருணாசலத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.


பின்னர் நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

இந்த மண்ணில் கம்யூனிஸ்டு கட்சிக்காக நான் அதிகமாக பாடியிருக்கிறேன். பொன்னுக்கு தங்க மனசு என்ற படத்துக்காக பாடல் எழுத கவிஞர் கண்ணதாசன் வரப்போகிறார் என்றதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. தேன் சிந்துதே வானம்... என்ற பாடலுக்கு நான் டியூன் பாடிக்காட்டிய உடனேயே அழகான வரிகளை எழுதிக் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன். அவருக்கு இணையான கவிஞன் இந்த உலகத்திலேயே கிடையாது.

எனக்கு முதன்முதலில் அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினி, கமல் 2 பேரும் தனியாக நடிக்க முடிவெடுத்த அந்த காலத்தில் அவர்களிடம் தனித் தனியாக கால்ஷிட் வாங்கி ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன் போன்ற படங்களின் கதைகளை ஒரு வாரத்தில் தயாரித்து இயக்கி வெற்றி கண்டவர் பஞ்சு அருணாசலம். அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது மிகவும் பொருத்தமானது.

எனக்கு இளையராஜா என்ற பெயரை கொடுத்தவரே அவர் தான். எனது 14 வயதில் மாலை பொழுதில் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி... என்ற பாடலை கேட்டுதான் இசை மீது ஆர்வம் வந்தது. பாடுபட்டு பாடினால்தான் பாட்டு வரும். இசை என்பது புனிதமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments