திரை விமர்சனம் : அரண்மனை!!!

23rd of September 2014
சென்னை:நகைச்சுவை, காதல் மற்றும் கவர்ச்சி என்று தொடர் கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த சுந்தர்.சி, முதல் முறையாக இயக்கியிருக்கும் திகில் படம் தான் 'அரண்மனை'.

யாரும் பயன்படுத்தாத, பழைய அரண்மனை ஒன்றை, அதன் உரிமையாளர்கள் விற்பனை செய்ய முடிவு செய்கிறார்கள். அதற்காக அந்த அரண்மனையின் வாரிசுகளான நாயகன்  வினை, அவரது மனைவி ஆண்ட்ரியா, அவருடைய மாமன் மகள் ராய் லக்ஷ்மி, அவருடைய அத்தை-மாமாவான  கோவை சரளா - மனோபாலா ஆகியோர், அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்குகிறார்கள். அப்படி அவர்கள் தங்கும்போது, அங்குள்ளவர்களை ஒரு கொடூர  உருவம் அடிக்கடி பயமுறுத்துகிறது. அதே சமயம், அந்த அரண்மனையை விலைக்கு வாங்க இருக்கும், அந்த ஊரைச் சேர்ந்த சரவணனின்  வேலை ஆட்கள் மூன்று பேரை, அந்த கொடூர ஆவி கொலை செய்கிறது.


இதற்கிடையில், ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி, அந்த அரண்மனைக்கு வருகிறார். ஆண்ட்ரியா அரண்மனையில் நடக்கும் அச்சுரத்தல் விஷயங்களை அவரிடம் சொல்ல, சுந்தர்.சி, அந்த அரண்மனையில் நடப்பது என்ன என்பதை அறிய முயற்சிக்கும் போது , அவருக்கு திடுக்கிடம் பல உண்மைகள் தெரிய வருகிறது. அப்படி அவருக்கு தெரிந்த அந்த உண்மைகள் என்ன, அந்த அரண்மனையில் உலாவும் அந்த ஆவி யாருடையது, எதற்காக அது இவர்களை அச்சுறுத்துகிறது என்பது தான் அரண்மனை படத்தின் கதை.

கதை படித்தவுடனே அனைவரும், அந்த உண்மை என்ன என்பதை தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். ஆம், அந்த அரண்மனையில் உள்ளவர்களால் பாதிக்கப்பட்ட பெண்,  பேயாக வந்து அவர்களை பழிவாங்குவது தான் கதை என்றாலும், அந்த பெண் யாரால், எதற்காக, எந்த வகையில் பாதிக்கப்பட்டார் என்பதையும், பிறகு பேயாக வரும் அவர், தனது எதிரிகளை எப்படி பழிவாங்குகுகிறார் என்பதையும் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் அளவுக்கு இயக்குனர் சுந்தர்.சி திரைக்கதை அமைத்திருக்கிறார்.

ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, ஹன்சிகா என்று மூன்று முன்னணி நடிகைகள் படத்தில் நடித்திருந்தாலும், ஆன்ட்ரியாவுக்கு தான் நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எப்போதும் போல, ராய் லட்சுமி, இந்த படத்திலும் சிறிது கவர்ச்சிக்காகவும், சிறிது காமெடிக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

கதைப்படி  ஹன்சிகா தான் பேய், என்றாலும், பேயாக நடித்து நம்மை மிரட்டுபவர் ஆண்ட்ரியா தான்.

ஆவியின் அட்டகாசத்தினால்  பயத்தில் உறைந்திருக்கும் ரசிகர்கள், சந்தானத்தின் நகைச்வையால், சிரித்து சிரித்து உறைந்துவிடுகிறார்கள். சந்தானம் மற்றும் அவருடைய கூட்டணி  நகைச்சுவையுடன், மனோபாலா-கோவை சரளாவின் காதல் எப்பிசோட் மேலும் நம்மை கிச்சு கிச்சு மூட்டுகிறது.

கிளைமாக்ஸ் முடிந்த பிறகு வரும், இறுதிக் காட்சியில் வரும் ஆர்த்திக்குக்கு கூட, இயக்குனர் சுந்தர்.சி நடிக்கவும், வசனம் பேசுவதற்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனால், படத்தின் ஆரம்பத்தில் இருந்து வரும், நிதின் சத்யா, செட் பிராப்பார்டி  போல பயன்படுத்தப்பட்டுள்ளார்.

ஹன்சிகா, ஆண்ரியாவுடன் பாடல் காட்சிகளில் ஆட்டம் போடும், வினை அதற்குப் பிறகு, பேய்களின் அதிரடியால் காணமால போகிறார்.

இப்படத்தில் ஆண்ட்ரியாவின் அண்ணனாக நடித்துள்ள சுந்தர்.சி, சந்திரமுகி படத்தில் வரும் ரஜினிகாந்தின், வேடத்தைப் போல, பேய் குறித்து துப்பறிகிறார்.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். கார்த்திக் ராஜா, பின்னணி இசை திகில் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்தாலும், இந்த படத்தில் தான், யு.கே.செந்தில்குமார், "யாரு கேமரா மேன்" என்று கேட்கும் அளவுக்கு பணிபுரிந்துள்ளார்.

திகில் படம் என்றாலும், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, ஹன்சிகா என்று  அழகான ராட்சசிகளை வைத்தே இயக்குனர் ரசிகர்களை பயமுறுத்துகிறார். கிராபிக்ஸ், செட் உள்ளிட்ட அனைத்தும் பிரம்மாண்டமாக  இருக்கிறது. அதிலும் அந்த அரண்மனை செட் அமைப்பும் சிறப்பாக உள்ளது.

திகில் படம் என்றாலே, படத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை, ரசிகர்களை இறுக்கமாக வைத்திருக்கவே இயக்குனர் நினைப்பார்கள். ஆனால், தற்போது வரும் தமிழ் திகில் படங்கள், எந்த அளவுக்கு ரசிகர்களை பயமுறுத்துகிறதோ, அதை விடவும் மேலாக சிரிக்க வைக்கிறது. அந்த வகையில் தான் இயக்குனர் சுந்தர்.சி, தனது 'அரண்மனை' மூலம்  ரசிகர்களை பயமுறுத்துவதை விட அதிகமாக சிரிக்க வைக்கவே செய்துள்ளார்.

'அரண்மனை' பழையது தான்  என்றாலும், இயக்குனர் சுந்தர்.சி, அதை தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, தூசி தட்டி, சுத்தம் செய்து, நம்மை நிமிர்ந்துப் பார்க்க செய்துள்ளார்.

Comments