வினய் ரொம்ப அப்பாவி - சப்போர்ட் பண்ணும் இயக்குநர் சரண்!!!

5th of August 2014
சென்னை:காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ஜே.ஜே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்று பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள சரண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’. இப்படத்தில் வினய் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று புதுமுக நாயகிகள் அறிமுகமாகிறார்கள்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சரண் இயக்கிய முதல் படமான காதல் மன்னன் படத்தின் நாயகி மானு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, ‘ஆயிரத்தில் இருவர்’ பட நாயகிகள் சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா, கேஷா ஆகிய மூன்று பேரையும் ஊடகங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.


படம் குறித்து கூறிய சரண், “நான் ஒரு படத்திற்கு சுமார் இரண்டு வருடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்வேன். ஆனால், இப்படத்திற்காக நான் எடுத்துக்கொண்ட இடைவெளி மிக நீளமானது. 2008ஆம் ஆண்டு என்னுடைய மோதி விளையாடு படத்தில் நடித்த வினய், இப்படம் குறித்து நான் சொன்ன போது கதையை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவர் திருநெல்வேலி தமிழராக நடித்திருக்கிறார். இது போன்ற வேடத்தை தான் சார், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இதுபோன்ற வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை என்றும் கூறினார்.

வினயுடன் நான் நீண்ட வருடங்களாக பழகுகிறேன். அதனால் அவரைப் பற்றி பர்சனலாகவும் தெரியும். அவர் ரொம்பவே வெகுளியானவர். அவரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவர். அதனால் தான் அவரைப் பற்றி சில தவறான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவர் நடிக்கும் படத்தில் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க மறுப்பதாக வந்த செய்திகள் தவறு. அவர் அதிகமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கும் படங்களில் நடிக்கிறார், 


அதனால் தான் அவரால் இங்கு அதிக நேரங்கள் இருக்க முடியவில்லை, மேலும் அவருடைய அம்மா அவர் தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோவாக வலம் வர வேண்டும் என்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு பல கோவில்களுக்குச் செல்கிறார்கள், அந்த காரணத்தினாலும் அவரால் வர முடியாமல் போனதை அப்படி தவறாக எழுதுவிட்டார்கள். ஆனால், உண்மையிலே வினய் நல்ல நடிகராக மட்டும் இன்றி நல்ல மனம் கொண்டவர் என்பதையும் இங்கே சொல்லிக்கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.” என்று கூறி வினய்க்கு ரொம்பவே தான் பக்கபலமாக இருப்பதை காண்பித்தார்.

படம் குறித்து பேசிய வினய், “இந்த படத்தில் எனது கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும். சரண் சார் படத்தில் நடித்த அனுப்வம் ரொம்ப சந்தோஷம். இந்த படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு நிரந்தர இடம் கிடைக்கும். எனது திருமணத்தைப் பற்றி எனது கூட பழகும் சினிமா நண்பர்களும், எனது பெற்றொர்களும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் சினிமாவில் ஜெயித்த பிறகே திருமணம் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Comments