இளையராஜாவிடம் எனக்கு பிடித்த இசையை வாங்க முடியவில்லை – கஸ்தூரிராஜா ஆதங்கம்!!!

18th of August 2014
சென்னை:என்ன இப்படி சொல்லிவிட்டார்…? கஸ்தூரிராஜாவின் படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்ததே இளையராஜாவின் இசையும் அதன்மூலம் கிடைத்த பாடல்களும் தானே.. ஏன் இப்படி சொனார்.. எங்கே வைத்து இதை சொன்னார் என்று கேட்கிறீர்களா..

இரண்டு தினங்களுக்கு முன்னால் பிரசாத் லேபில் ‘சரித்திரத்தில் ஒரு ஈ’ என்கிற குறும்பட வெளியீட்டு விழா நடந்தது.. படம் தான் குறும்படமே தவிர விழா என்னவோ சினிமா விழாக்களை தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு பிரம்மாண்டம். இந்த குறும்படத்தில் நடித்த ஹீரோவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து பேண்டு வாத்தியங்களுடன் வரவேற்பு நடந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த விழாவில் கலந்துகொண்ட கஸ்தூரி ராஜா தான் பேசும்போது இந்த குறும்படத்தின் இசையமைப்பாளரை அருகில்  அழைத்து கட்டிப்பிடித்து பாராட்டினார்.. அப்போது “நான் இளையராஜாவுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அற்புதமான பின்னணி இசையை தந்திருக்கிறார். ஆனால் நான் இந்த இடத்தில் இந்தமாதிரி வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து வைத்திருப்பேன்.

ஆனால் ராஜா கொடுப்பதோ வேறுவிதமாக, நான் எதிர்பார்த்ததி விட சிறப்பாக இருக்கும். ஆனாலும் நான் நினைத்த இசையை வாங்கமுடியாதது எனக்கு தோல்வி தானே” என மனம் திறந்து பேசி இந்த குறும்பட இசையமைப்பாளர் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் என பாராட்டினார்.

மேலும் இந்த விழாவில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர். 

Comments