தொடர்ந்து ஏன் புதுமுகங்கள்? - இயக்குநர் பிரபு சாலமன் விளக்கம்

1st of August 2014
சென்னைஒரு படம் வெற்றி பெற்றால், அடுத்த படத்தில் பெரிய ஹீரோ, பெரிய ஹீரோயின், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று நட்சத்திர அந்தஸ்த்து உள்ளவர்களுடன் கைகோர்க்கும் சில இயக்குநர்களின் மத்தியில், தனது மாபெரும் வெற்றியான மைனா படத்தை தொடர்ந்து கும்கி படத்திலும் புதுமுகத்தை தனது கதைக்கு நாயகனாக்கிய இயக்குநர் பிரபு சாலமன், தற்போது இயக்கு வரும் ‘கயல்’ படத்திலும் புதுமுகம் ஒருவரை தான் நாயகனாக நடிக்க வைத்துள்ளார்.

ஏன் இப்படி தொடர்ந்து புதுமுகங்களுடன் பயணிக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் நமது பல கேள்விகளுக்கு இயக்குநர் பிரபு சாலமன் கூறிய பதில் இதோ...
 
கயல் எப்போ திரைக்கு வரும்?

முழுமையாக முடிந்த பிறகு என்ற ஒற்றை வரி பதில் திருப்தி இல்லாத நம் முகபாவத்தை நோட்டமிட்ட அவர்..அவசரமான படைப்பு ஆபத்தாகி விடும். இப்போது தான் டப்பிங் வந்துருக்கோம். எங்களது படைப்பில் என்னக்கு திருப்தி வரும்போது மக்கள் பார்வைக்கு வரும்.

சுனாமி பாதிப்புகள் ஏற்ப்படுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டது. டிசம்பர்  26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது. அதிலும் கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதித்தது. அதை தான் பதிவு செய்திருக்கிறோம்.

எவ்வளவு பேர் சொத்து, உறவுகள், உடமைகளை இழந்தார்கள் அதில் தொலைந்து போன ஒரு காதல் தான் ’கயல்’

உங்கள் கதைகளில் நட்சத்திர நடிகர்கள் இருப்பதிலேயே……

என்னுடைய ஆரம்பகால படங்களில் அர்ஜுன், விக்ரம், சிபிராஜ், கரன் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்களே! மைனா, கும்கி, கயல் போன்ற என் எதார்த்த கதைகளுக்கு நட்சத்திர நடிகர்கள் சரியாக மாட்டார்கள்.

என் கூடவே பயணமாகிற மாதிரியான நடிகர்கள் மைனாவுக்கும், கும்கிக்கும் தேவைப்பட்டது லொகேசன் கொடுத்த இயற்கை மாற்றதிற்கேற்ப மைனா படத்தை எடுத்தோம். அதனால் புதுமுகம் தான் சரி.

யானையின் மூடுக்கேற்ப படமாக்கப் பட வேண்டியதால் கும்கிக்கும் புதுமுகம் தேவைப்பட்டது.

கயல் படத்திற்காக பிரமாண்ட  நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதில் காலை 7 மணிக்கு இறங்கினால் மாலை  வரை அதில் இருக்க கூடிய புதுமுகம் தேவை என்பதால் கயலிலும் புது முகம் தான் !

கமர்ஷியல் படத்தில் நம்பிக்கை இல்லையா!

கமர்ஷியல் என்பது உங்கள் பார்வையில் அடிதடி மட்டும் தானா என்று எதிர் கேள்வி கேட்ட அவரே தொடர்ந்தார் அடிதடி என்பது மட்டும் வாழ்வியல் அல்ல.

நம்மை கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு! நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு! அதை பதிவு செய்வதில் கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது. எதை பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியப்படுவோம்.

நம் வீட்டிற்குள் 340  சேனல்கள் வருகிறது, பெண்கள் சமயலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள்.

இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த சின்ன சைஸ் பெட்டிக்குள்  உலகம் நம் முன்னே வந்து விடுகிறது. அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டி உள்ளது.

கயல் படத்தின் கதை கருவாக  சுனாமி மட்டும் தானா ?

முழு காமெடியுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கை தான் சுகமானதாக அமையும். என்கிற மையக் கருதான் காமெடியுடன் சொல்லப்படுகிறது. கடைசி அரைமணி நேரம் யாருமே எதிர் பார்க்காத திருப்பம் இருக்கும்.

இவ்வாறு பரபரப்பு மிகுந்த பணியிலும் அமைதியாக பதில் அளித்தார் இயக்குநர் பிரபு சாலமன்.

Comments