அண்ணிக்கு வரதட்சணை கொடுமை: நடிகை ரம்பா மீது வழக்கு!!!

23rd of July 2014
சென்னை:அண்ணிக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக நடிகை ரம்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, திரி ரோசஸ், அருணாசலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரம்பா.
 
இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவரது அண்ணன் சீனிவாஸ். இவருக்கும் பல்லவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இந்நிலையில், ரம்பா, சீனிவாஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக பல்லவி ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

ஆனால் ரம்பா குடும்பத்தினரின் வலியுறுத்தலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல்லவி, ஐதராபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘எனது கணவர் சீனிவாஸ், அவரது சகோதரியும் நடிகையுமான ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினர், என்னையும் எனது பெற்றோரையும் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்து வருவதாக‘ தெரிவித்திருந்தார்.
 
இதுதொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் நடிகை ரம்பா, அவரது சகோதரர் சீனிவாஸ் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments