பாக்சிங் வைத்து படமெடுக்க முடியாது! :ஜெயம்’ ரவி!!!

1st of July 2014
சென்னை:இயக்குனர் ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் இயக்கத்தில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பூலோகம்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா நடித்துள்ளனர். இப்படம் குறித்து ‘ஜெயம்’ ரவி பேசும்போது,

‘‘இந்தப் படத்திற்காக ஆயிரம் மடங்கு உழைத்துள்ளோம். சக்திக்கு மீறி உழைத்தால் தான் இந்த அளவுக்கு ஒரு படத்தை கொடுக்க முடியும். நாங்கள் பாக்சிங் வைத்து படம் எடுப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை. பாக்சிங் வைத்து படமெடுக்க முடியாது. பாக்சிங்கில் 6 பஞ்ச் தான் இருக்கு. இந்த 6 பஞ்ச்சை மட்டும் தான் சட்டப்படியாகவும் அனுமதிப்பார்கள். அதை வைத்துக்கொண்டு முழு படத்தை எடுக்க முடியுமா என்றால் முடியாது. எதுக்கு ஹீரோ அடிக்கிறான், வில்லன் எதுக்கு அடி வாங்குகிறான் என்ற ஒரு எமோஷனல் விஷயத்தை கொன்டு இப்படத்தை பண்ணியிருக்கிறோம்.


ஹீரோ அடிப்பது தங்கச்சிக்காகவா, அம்மாவிற்காகவா, மக்களுக்காகவா, காசுக்காகவா, இல்லை வெறியா, அல்லது பழி வாங்குவதற்காகவா எதற்கு என்பது தான் முக்கியமான விஷயம். இதுல எமோஷன் தான் கு முக்கியம். பாக்சிங் கிடையாது. பாக்சிங் எங்கே தேவைப்பட்டது என்றால் ஹீரோ கேரக்டருக்கு ஒரு உண்மைத் தன்மை கொடுப்பதற்கு மட்டும் தான் தேவைப்பட்டது. இந்தப் படத்திற்காக பாக்சிங் ட்ரைனிங் 2 மாதம் எடுத்தேன். ரொம்பவும் கஷ்டப்பட்டேன். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த ட்ரைனிங்கில் இரண்டு ரவுண்ட்ஸ்களுக்கு மேலே போக முடியவில்லை. உண்மையான பாக்சர்களை நினைத்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

இந்தப் படத்தின் இயக்குனர் கல்யாண் என்னுடைய நண்பர். நான் நடித்த ‘பேராண்மை’ படத்திற்கு திரைக்கதை எழுதியவர். திறமையானவர். அவருடைய திறமை விரைவில் அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில்லிங், எமோஷனல் என அனைத்தும் உள்ளது. ‘பூலோகம்’ நீங்கள் விரும்பும் ஒரு படமாக இருக்கும் இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் முழு உழைப்பையும் கொடுத்துள்ளோம்’’ என்றார்.

Comments