சரண்யா மோகன், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு எந்தவித ஸ்பெசல் கவனிப்புகளையும் எதிர்பார்க்கவில்லையாம்!!!


17th of June 2014
சென்னை:சமீபகாலமாக ஓரிரு படங்களில் நடித்ததுமே படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கு கேரவன் வசதி செய்து தர வேண்டும் என்று நடிகைகள் கெடுபிடி செய்து வருகின்றனர். அதிலும் மும்பை நடிகைகளென்றால் முதல் படத்தில் நடிக்கும்போதே கேட்கிறார்கள், வெளியூர் நடிகைகளுக்கு எப்போதுமே மவுசு கூடுதல் என்பதால் தயாரிப்பாளர்களும் உடனே அவர்களுக்கு கேரவன் அனுப்புகிறார்கள்.
ஆனால், தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் சில நடிகைகள் பல படங்களில் நடித்த பிறகும் கேரவன் வசதியை எதிர்பார்க்காமல் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சரண்யா மோகன் குறிப்பிடத்தக்கவர். கேரளத்தைச்சேர்ந்தவரான இவர், தனுஷ்-நயன்தாரா நடித்த, 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர், அதையடுத்து சுசீந்திரன் இயக்கிய, 'வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது விஜய் நடிப்பில் ப்ரியமானவளே, வசீகரா, நினைத்தேன் வந்தாய் ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி இயக்கியுள்ள, 'காதலைத்தவிர வேறொன்றுமில்லை' என்ற படத்தில் 'சாட்டை' யுவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை செல்வபாரதியே தயாரிப்பதால் பெரிய அளவில் சம்பளமும் கேட்காத சரண்யா மோகன், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு எந்தவித ஸ்பெசல் கவனிப்புகளையும் எதிர்பார்க்கவில்லையாம்.
 
யூனிட் நபர்கள் சாப்பிடும் உணவுகளையே சாப்பிட்டாராம். முக்கியமாக, கத்திரி வெயில் கொளுத்தும் இடங்களில் படப்பிடிப்பு நடந்தபோதும் கேரவன் இருந்தால்தான் ஸ்பாட்டுக்கு வருவேன் எனறு சொல்லாமல், தனது உதவியாளரை குடைபிடித்துக்கொள்ளச்சொல்லி நடித்திருக்கிறார். மதிய இடைவேளைகளில்கூட ஓய்வு என்று மேக்கப் அறையில் சென்று குட்டித்தூக்கம் போடாமல், ஸ்பாட்டிலேயே நின்று நடித்துக்கொடுத்திருக்கிறார்.
 
சரண்யாமோகனின் இந்த அருமை பெருமைகளைப்பற்றி அப்படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் சென்னையில் நடந்தபோது தெரிவித்தார் செல்வபாரதி.

Comments