ஷாமுக்கும் ஜெயம் ராஜாவுக்கும் பாலா கொடுத்த வாக்கு!!!


7th of June 2014
சென்னை:நேற்று முன் தினம் நடைபெற்ற விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சலீம்’ திரைப்பட விழாவில் பல சுவராஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறின. விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஷாம், தான் காலையில் ஒரு கனவு கண்டதாகவும் அந்த கனவில் இயக்குனர் பாலா தனது அடுத்த படத்தில் ஷாம் நடித்தே ஆகவேண்டும்.. அப்படியென்றால் தான் நான் படமே எடுப்பேன் என ஷாமிடம் பிடிவாதமாக நின்றதாகவும் கூறினார்.
 
அதிலும் அந்த கனவு அன்றைய தினம் அதிகாலையிலேயே வந்ததும் இன்றைக்கு இந்த மேடையிலேயே பாலாவை சந்தித்ததும் ஏதோ நல்லது நடக்கப்போவதற்கான அறிகுறியாகத்தன் தெரிகிறது என போகிற போக்கில் பாலாவிடம் அப்ளிகேஷனை போட்டு வைத்தார்.
 
ஜெயம் ராஜா மட்டும் சும்மா விடுவாரா என்ன..? அவர் பேசும்போது, “என் தம்பி(ஜெயம் ரவி) எப்போது பார்த்தாலும் பாலா சாரின் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். பாலா சார் கொஞ்சம் மனசு வைங்க” என தன் தம்பிக்கு மைக்கிலேயே சிபாரிசு கடிதம் நீட்டினார்.
 
அடுத்து பாலா பேசியபோது, “ஷாம் நடித்த 6 மெழுகவர்த்திகள் படத்தை முழுதாக பார்க்கவில்லையே தவிர அதில் சில காட்சிகளை பார்த்தேன். கண்ணெல்லாம் வீங்கி கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொண்ட அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்காகவே வரும் காலத்தில் எனது படத்தில் நிச்சயமாக ஷாமை நடிக்கவைப்பேன்” என்றபோது ஷாமின் முகத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற பூரிப்பு தெரிந்தது.
 
அதேபோல ஜெயம் ராஜாவை பார்த்து, “ராஜா நானே உங்கள் தந்தையிடம் ஜெயம் ரவி கால்ஷீட் பற்றி பேசலாம் என்று இருந்தேன். விரைவில்  அவரை சந்திக்கிறேன்” என ஷாம், ஜெயம் ராஜா இருவருக்கும் உறுதி அளித்தவர், தொடர்ந்து பேசும்போது, “ஷாம், ரவி இருவருமே அர்ப்பணிப்புடன் தங்களது கேரக்டருக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நான் தேடிப்போவேன். சும்மா வெறும் பாட்டு, டான்ஸ் என்பவர்களுக்கு என் படத்தில் வேலை இல்லை.. கோடி ரூபாய் கொடுத்தாலும் அவர்களை வைத்து நான் படம் இயக்கமாட்டேன்” என்றார்.
ஷாமுக்கும் ஜெயம் ரவிக்கும் இதைவிட சிறந்த பாராட்டும் அங்கீகாரமும் வேறென்ன வேண்டும்..?

Comments