சூர்யா - ஞானவேல் ராஜா - கூட்டணியில் புதிய குழப்பம்!!!

8th of June 2014
சென்னை:சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை சமீப காலமாக அவரது உறவினரான ஞானவேல் ராஜாதான் தயாரித்து வந்தார். அதோடு வேறு நிறுவனங்கள் தயாரித்த சில படங்களையும் ஞானவேல் ராஜா வாங்கி வெளியிட்டு வந்தார்.
 
இந்த நிலையில் 'சிங்கம் 2' படத்தை தனது புதிய பட நிறுவனமான '2டி' என்ற நிறுவனத்தின் மூலம் சூர்யா வெளியிட்டார். அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவர்கள் வழக்கமாக வெளியிடும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வெளியிடாமல் புதிதாக வெளியிடுவதற்குக் காரணம் என்ன என அனைவரும் யோசித்தார்கள். அப்போதே சூர்யாவுக்கும், ஞானவேல் ராஜாவுக்கும் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். அதாவது, சூர்யாவுக்கு வரவேண்டிய சில கதைகளை அவர் கார்த்தி பக்கம் தள்ளி விடுகிறார், அதனால் இருவருக்கும் மனக்கசப்பு உருவாகிவிட்டது என்றார்கள். அப்படி அவர் தள்ளி விட்ட படங்களும் படு தோல்விப் படங்களாகவே அமைந்தது வேறு கதை.
 
இந்த சூழ்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் புதிதாக உருவாக்கிய கதையை ஞானவேல் ராஜாவிடம் சொல்லியிருக்கிறார். அவரோ இந்த கதையை சூர்யாவிடம் சொல்லச் சொல்ல, பாண்டிராஜ் சூர்யாவைச் சந்தித்து கதையை சொல்லியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துப் போக, சூர்யா அவரது நிறுவனத்திலேயே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முடிவு செய்திருக்கிறார். இதன் பின், பாண்டிராஜ், ஞானவேல் ராஜா பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம். நாம்தானே, சூர்யாவைச் சந்திக்கச் சொன்னோம், இப்போது நம்மையே கண்டு கொள்ளவில்லையே என தனது நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பித் தள்ளுகிறாராம் ஞானவேல் ராஜா.

Comments