'ஜாலியான படம் ரெடி' - கே.வி.ஆனந்த்!!!

26th of June 2014
சென்னை:ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்தின் உதவியாளர் சாய் கோகுல் ராம்நாத் இயக்கி, இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘வாலிபராஜா’. சந்தானம், சேது, விசாகாசிங் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தேவி தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், மற்றும் கமல்ஹாசன், கே.வி.ஆனந்த், டி.சிவா, கே.ராஜன், ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எல்.சுரேஷ், சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சந்தானம் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வர இயலவில்லை என ‘வாலிபராஜா’ படக்குழுவினர் தெரிவித்தனர்.

 
அந்தால ராக்‌ஷசி’ தெலுங்கு படத்திற்கு இசையமைத்த ரதன் இசையமைப்பில் உருவான ‘வாலிபராஜா’ படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட, ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். முன்னதாக ‘வாலிபராஜா’ படத்தின் மூன்று பாடல்களும், ட்ரைலரும் திரையிடப்பட்டது. இப்படத்திற்காக, கானா பாடல்களின் துவக்க வரிகளையெல்லாம் சேர்த்து ஒரு பாடலை கானா பாலா எழுதி, பாடியுள்ளார்.

விழாவில் கே.வி.ஆனந்த் பேசும்போது, ‘‘சாய் கோகுல் ராம்நாத் என்னோட நல்ல உதவியாளர். அவருக்கு இயற்கையிலேயே நல்ல காமெடிசென்ஸ் உள்ளது. சோகமான விஷயங்கள் அவருக்குப் பிடிக்காது. நான் சோகமான காட்சி எடுக்கும்போது தூரமாக சென்று விடுவார். படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது நல்லா இருக்கு. எனவே நல்ல ஜாலியான படமாக தான் இதை பண்ணியிருக்க வேண்டும். ரசிகர்களுக்கு ஒரு ஜாலியான படம் ரெடி’’ என்றார்.
பக்கா ஒரு யூத்ஃபுல்லான காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments