கார்த்தியின் ‘மெட்ராஸ்’ – ஒரு ரவுண்ட் அப்!!!!

25th of June 2014
சென்னை:ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் ‘மெட்ராஸ்’. சென்னை மக்களின் வாழ்வியலை பேசும் இப்படத்தை ‘அட்டக்கத்தி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

மதுரை மண்ணின் மைந்தனாக, முரட்டு போக்கிரியாக கார்த்தி நடித்த படம் ‘பருத்திவீரன்’. இந்தப் படத்தில் கார்த்தி ஏற்று நடித்த வேடம் இன்றளவும் பேசப்படுகிறது. அதே கார்த்தி சென்னை மக்களின் மைந்தனாக நடித்துள்ள படம் ‘மெட்ராஸ்’. இதுவும் அவருக்கு மைல்கல்லாக அமையப்போகிறது. ‘அட்டக்கத்தி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு ரஞ்சித் இயக்கும் படம் இது என்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
‘மெட்ராஸ்’ படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது,


வட சென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் தான் ‘மெட்ராஸ்’. அவர்களின் வாழ்க்கையை, கொண்டாட்டத்தை, அரசியலை சொல்கிற இயல்பான பதிவாக படம் இருக்கும். வட சென்னை சமூகத்தின் பாசாங்கற்ற ரத்தமும், சதையுமான பதிவாக ‘மெட்ராஸ்’ இருக்கும்’’ என்கிறார்.

அவர் மேலும் குறுகையில், ‘‘இது தனிநபர் சார்ந்த கதை அல்ல. ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையின் பதிவு. அங்குள்ள ஒரு இளைஞனாக கார்த்தி இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். எங்கும் அவர் தனித்து வெளிப்படமாட்டார். மண்ணோடு, மக்களோடு, அந்த கலாச்சார சூழலோடு கலந்த ஒரு குணச்சித்திரமாகவே தெரிவார்’’ என்கிறார்.

இந்த கதை பற்றி கருத்து கேட்கவே இதன் திரைக்கதை கார்த்தியிடம் போயுள்ளது. படித்து கதைக்குள் இறங்கிய கார்த்தி, தானே இதில் நடிப்பதாக விரும்பியிருக்கிறார். ஐடி படித்த இளைஞனாக கார்த்தி நடித்துள்ளார். சென்னையில் வளர்ந்த கார்த்திக்கு சென்னை மொழி ஏற்கெனவே அறிமுகமானது தான். எனவே பேசி நடிக்கும்போது சிரமப்படவில்லை.

நாயகி கேத்ரின் தெரசா ஒரு தெலுங்கு நடிகை. அவருக்கு தமிழும், சென்னை தமிழும் பயிற்சியளிக்கப்பட்டு நடித்துள்ளார். காளியாக கார்த்தி, கலையரசியாக கேத்ரின் தெரசா என நாயகன், நாயகி தவிர மற்றவர்கள் பெரும்பாலும் பரிச்சயமில்லாத முகங்களே. கதையின் இயல்பு கெட்டுவிடக் கூடாது என்பதால் பெரும்பாலும் புதியவர்களையே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் 99 சதவிகித படப்பிடிப்பும் வட சென்னை பகுதியிலேயே நடந்துள்ளது. 70 நாட்கள் வட சென்னையில் இதுவரை கேமிரா நுழையாத பகுதிகளில் படப்பதிவு நடந்துள்ளது. அங்குள்ள நெருக்கமான இ
றுக்கமான வீடுகளிலும், சந்து பொந்துகளிலும், இண்டு இடுக்குகளிலும் கேமரா புகுந்து காட்சிகளை சிறைப்படுத்தியுள்ளது.

பாசாங்கு சினிமாவின் நிறமோ, பளபளப்பு கூட்டும் தரமோ வந்து விடாதபடி அசல் தன்மையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் முரளி.ஜி. இவர் பூனே திரைப்பட கல்லூரி மாணவர். குறும்படத்துக்காக தேசிய விருது பெர்றவர்.

இசையமைத்துள்ளவர் சந்தோஷ் நாராயணன். படத்தில் இடம் பெறும் சாவு கானா பேசப்படும். மொத்தம் 5 பாடல்கள். கபிலன், கானா பாலா, கு.உமாதேவி எழுதியுள்ளனர். கலை இயக்கம் - இராமலிங்கம், நடனம் -சதீஷ், ஸ்டன்ட் - அன்பறிவு, படத்தொகுப்பு - ப்ரவீன், ஒலிவடிவமைப்பு – ரூபன் என அனைவரும் ரஞ்சித்தின் படைப்பிற்கு பலம் சேர்க்கும் பரிவாரங்களாக இயங்கியுள்ளனர்.

படத்தின் கதையின் மேல் நம்பிக்கை வைத்து தன்னை முழுவதுமாக ஒப்படைப்பு செய்து வட சென்னை வாலிபன் காளியாக வாழ்ந்துள்ள கார்த்தியின் அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறார் இயக்குனர் ரஞ்சித். படப்பிடிப்பு என்று வந்த பிறகு வசதிகளை மறந்து 10க்கு 10 அறையில் கூட புழுக்கம் பொறுத்து நடித்துக் கொடுத்தாராம் கார்த்தி.

‘மெட்ராஸ்’ ஜூலை வெளியீடு! ஒரு மண்வாசனை அனுபவத்துக்கு தயாராக இருங்கள்!
 
 
 

Comments