சென்னையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் தெலுங்கில் தொடரும் சமந்தாவின் சக்சஸ்!!!

25th of May 2014
சென்னை::தமிழ்நாடு, அதிலும் சென்னையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சமந்தா தற்போதுதான் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'கத்தி', சூர்யாவுடன் 'அஞ்சான்', அடுத்து விக்ரமுடனும் நடிக்கப் போகிறாராம்.

ஆனால், தெலுங்கில் தற்போதைக்கு முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா மட்டும்தான். இன்று வெளியான 'மனம்' திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பும் அதிகமாக இருப்பதால், சமந்தாவை தெலுங்கத் திரையுலகில் ராசியான நடிகை என்றே சொல்கிறார்கள்.
'மனம்' திரைப்படம்தான் ஏ.நாகேஸ்வரராவ் நடித்த கடைசி திரைப்படமாகும். இந்த படத்தில் தாத்தா நாகேஸ்வரராவ், மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா, ஸ்ரேயா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு முன் சமந்தா நடித்த 'அத்தாரின்டிக்கி தாரேதி' படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தெலுங்கில் மூன்று படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு கடும் போட்டியைத் தரும் ஸ்ருதிஹாசன், தமன்னா ஆகியோர் கூட சமந்தாவின் வளர்ச்சியைப் பார்த்து பொறமையாகத்தான் இருக்கிறார்களாம்.

'மனம்' படம் வெற்றி பெற்றதையடுத்து சமந்தா மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்.
ஒரு படம் வெற்றி பெற்ற உடனே நான் என்ன பண்ணுவேன் தெரியுமா. வீட்டுக்குப் போயிட்டு அருமையா டின்னர் சாப்பிடுவேன். அதுவும் தயிர்சாதம், ஊறுகாய் மட்டும்தான். அப்பதான் மனசும், வயிறும் நிறையும். அப்புறம் அந்த படத்துக்கு கிடைச்ச வெற்றியை எப்படி தக்க வச்சிக்கிறதுன்னு யோசிப்பேன்,” என்கிறார் சமந்தா.

தெலுங்கை அடுத்து தமிழில் எப்படியாவது முதலிடத்தைப் பிடித்து விட வேண்டுமென முயற்சியில் இருக்கிறார் சமந்தா...

Comments