பெங்களூரு டேய்ஸ் (மலையாளம்) – விமர்சனம்!!!

31st of May 2014
சென்னை::நடிகர்கள் : ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் மற்றும் பலர்
இசை : கோபிசுந்தர்
ஒளிப்பதிவு : சமீர் தாஹீர்
இயக்கம் : அஞ்சலி மேனன்
தயாரிப்பு : அன்வர் ரஷீத்
 
துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா மூவரும் சிறுவயதிலிருந்து திக்கோ திக் ஃப்ரண்ட்ஸ்.. இவர்கள் மூவரின் சிறுவயது கனவும் பெங்களூருக்கு போய் ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்பது தான். வளர்ந்து பெரியவர்களானதும் நிவின் பாலிக்கு பெங்களூரில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்கிறது.. நஸ்ரியாவுக்கு பெங்களூரில் வேலைபார்க்கும் ஃபஹத் ஃபாசிலுடன் திருமணமாகிறது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த துல்கருக்கும் அதே பெங்களூரில் ரேஸ் பைக் மெக்கனிக்காக வேலை கிடைக்கிறது.
 
இதில் திருமணமாகும் முன்பே தான் ஒரு பெண்ணை (நித்யா மேனன்) காதலித்த விவரத்தை முன்கூட்டியே சொல்லி நஸ்ரியாவை திருமணம் செய்யும் ஃபஹத் ஃபாசில், திருமணத்துக்குப்பின்னும் அந்த பெண் நினைவிலேயே நஸ்ரியாவுடன் ஒட்டாமல், ஒரு இயந்திரம் போல வேலைக்கு போய் வருகிறார்.
 
ஆனால் துறுதுறு நஸ்ரியாவோ கணவன் வெளியூர் சென்றதும் தனிமையை போக்க, துல்கர், நிவின் இருவருடனும் சேர்ந்துகொள்ள, மூவரும் பெங்களூரை சுற்றிச்சுற்றி ஜாலி ட்ரிப் அடித்து தங்களது சிறுவயது கனவை நனவாக்கிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த மூவரின் நட்பு ஃபஹத்தை புருவம் உயர்த்த வைத்தாலும் ஒருகட்டத்தில் அந்த நட்பின் மேன்மையை புரிந்துகொள்கிறார். இருந்தாலும் நஸ்ரியாவுடன் ஒட்டாத வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது.
 
இடையே நிவினுக்கு ஏர் ஹோஸ்டஸான இஷா தல்வாருடனும், துல்கருக்கு ரேடியோ ஜாக்கியான ‘மரியான்’ பார்வதியுடனும் லவ் மூட் ஸ்டார்ட் ஆகிறது. இஷா தல்வார் ஒருகட்டத்தில் நிவினை விட்டு தனது முந்தைய காதலனுடன் சேர்ந்துகொள்ள, பார்வதியோ தனது தாயின் ஆலோசனைப்படி வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார்.
 
பைக் ரேஸில் கலந்துகொள்ள முடிவு செய்யும்போது, ஃபஹத்தின் ஃப்ளாஸ்பேக் பற்றி அறிந்துகொள்ளும் துல்கர், அதை நஸ்ரியாவிடம் விளக்க, கோபித்துக்கொண்டு ஊருக்குச்சென்ற நஸ்ரியா காதலுடன் திரும்பி வருகிறார். அதை துல்கர் மூலம் ஃபஹத்தும் உணர்கிறார். கடைசியில் ஃபஹத் – நஸ்ரியா திருமண வாழ்க்கையில் தென்றல் வீசியதா, நிவின் மீண்டும் காதல்வயப்பட்டாரா, துல்கர் – பார்வதியின் காதல் விமானம் ஏறியதா இல்லையா என மூன்று பிரச்சனைகளுக்கும் சுபமான தீர்வு சொல்லி, மகிழ்ச்சியாக படத்தை முடித்திருக்கிறார் அஞ்சலி மேனன்.
துல்கர், நிவின், நஸ்ரியா இவர்களின் நட்பு லேட்டஸ்ட் ‘புது வசந்தம்’. இவர்கள் மூன்று பேரும் அடிக்கும் லூட்டிகளை பார்க்கும்போது ஆண், பெண் நட்பு என்றால் இப்படித்தான் கள்ளங்கபடமில்லாமல் இருக்கவேண்டும் என மனதில் ஒரு புது உணர்வு தோன்றுகிறது.
ஃபஹத் ஃபாசில் அசால்ட்டான நடிப்பால் தனது கேரக்டருக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார். துல்கரும் நிவினும் படபடவென வடைச்சட்டியில் போட்ட கடுகு மாதிரி பொரிந்து தள்ள, அமைதியான கேரக்டரில் அதிர்ந்து பேசாமல் அளந்து பேசும் வார்த்தைகளுடன் அண்டர்பிளே செய்து அப்ளாஸ் அள்ளுகிறார் ஃபஹத். நஸ்ரியாவுடன் ஊடல், கூடல் என நடிப்பில் சரிவிகிதம் காட்டியிருக்கிறார். அவர் ரேஸ் வீரர் என தெரியவரும் காட்சி மாஸ் என்றால், கடைசியில் துல்கரின் காதலை சேர்த்து வைக்க அவர் கார் ஓட்டும் காட்சி செம மாஸ்.
 
பைக் ரேஸ் வீரராக துல்கர் சல்மான். விட்டேத்தியான மனப்பான்மையுடன், வாழ்க்கையை அந்த நிமிடத்திலேயே வாழ்ந்துவிட துடிக்கும் இளைஞனை நம் கண் முன் நிறுத்துகிறார் துல்கர்.. நஸ்ரியாவை அவரது கணவன் முன்பே நட்புடன் கட்டிப்பிடிக்கும்போது, நமக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறார் அதேபோல பார்வதிக்கும் அவருக்குமான காதல் க்ளாசிக் ரொமான்ஸ்.
நிவின் பாலி.. எதார்த்த நாயகன்.. நண்பர்களுக்குள் பாலமாக இவர் செயல்படும் அழகே தனி. தனது கிராமத்து அம்மா பெங்களூர் வந்தபின் செய்யும் அலப்பறைகளை தாங்கமுடியாமல் முனகுவது செம காமெடி.. இஷா தல்வாருடன் காதலை ஏற்படுத்த மெனக்கெட்டு, பின் அந்த காதல் ஒர்க் அவுட் ஆகாமல் கடைசியில் பல்பு வாங்கும்போதுகூட நம்மை சிரிக்க வைக்கிறார்.
 
நான்கு ஹீரோயின்கள் இருந்தாலும் எங்கும் எதிலும் முன்னணியில் நிற்கிறார் நஸ்ரியா.. ‘ராஜா ராணி’யை விட இதில் மும்மடங்கு கலாட்டா பண்ணியிருக்கிறார். படம் பார்க்கும் இளைஞர்களை இப்படி ஒரு தோழி நமக்கும் கிடைக்க மாட்டாரா என ஏங்கவைக்கிறார்.
 
அடுத்ததாக ‘மரியான்’ பார்வதி. ரேடியோ ஜாக்கியாக துள்ளலான குரலில் பேசி அனைவரையும் தன்வசப்படுத்தும் பார்வதி எலக்ட்ரிக் வீல் சேரில் வலம் வரும்போது துல்கருக்கு மட்டுமல்ல நமக்கும் எல்க்ட்ரிக் ஷாக் கொடுக்கிறார். ஆனால் அவரது ஹேர்ஸ்டைலும், பேச்சுக்களும் நாம் தமிழில் பார்த்த பார்வதிதானா அவர் என சந்தேகப்பட வைக்கும் அளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை டானிக் தருகிறார்.
 
கொஞ்ச நேரமே வந்தாலும் நித்யா மேனன் க்யூட். இந்த கூட்டத்தில் இஷா தல்வார் தான் பாவம்.. அவ்வளவாக எடுபடவில்லை. நிவினின் அம்மாவாக வரும் கல்பனாவின் காமெடி இன்னொரு பக்கம் நம்மை ரிலாக்ஸ் பண்ணுகிறது. பிரதாப் போத்தன், வினய் பிரசாத், மணியம்பிள்ளை ராஜு, விஜயராகவன் என மற்ற சில கதாபாத்திரங்களும் கன பொருத்தம்.
சமீர் தாஹீரின் கேமரா பெங்களூர் முழுக்க சுற்றி அதன் புதிய அழகை அள்ளிவந்து நம் முன் தூக்கிப்போடுகிறது. கோபிசுந்தரின் இசையில் அந்த கல்யாண வீட்டுப்பாடலை கேட்டால் ஜாலி மூட் வந்து நீங்களும் ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.
 
உஸ்தாத் ஹோட்டல் படத்தில் தான் எழுதிய வசனங்களுக்காக தேசிய விருதுபெற்ற அஞ்சலி மேனன் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. தனது படத்திற்கு பொருத்தமான மூன்று முன்னணி இளம் ஹீரோக்களையும் அவர்களுக்கு ஏற்ற ஜோடிகளையும் தேர்வு செய்ததிலேயே தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறார் அஞ்சலி. இத்தனை நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு அவர் வேலை வாங்கியிருக்கும் விதமே அழகு.
ஃபீல் குட் ஸ்டோரி என்று சொல்வார்களே அப்படி ஒரு படத்தைத்தான் அழகாக வடித்திருக்கிறார் இயக்குனர் அஞ்சலி மேனன்.. ஆண்-பெண் நட்பில் துளிகூட காதலை கலக்காமலும் அந்த நட்பை மற்றவர் சந்தேகப்படாமலும் கொண்டு சென்றிருப்பதன் மூலம் வழக்கமான சினிமா பாதையில் இருந்து மாறி ஒரு நேர்த்தியான படைப்பை தந்திருக்கிறார். மொத்தத்தில் படத்தின் 172 நிமிடங்களையும் கலகலப்புடன் போரடிக்காமல் கொண்டுசென்றிருக்கும் அஞ்சலி மேனன் தனக்கு கிடைத்த தேசிய விருதுக்கு தான் தகுதியானவர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
 

Comments