ஒரு வெற்றிக்காக போராடும் ஹீரோக்கள் : ஸ்பெஷல் ஸ்டோரி!!!

10th of April 2014
சென்னை::தமிழ் சினிமாவின் வித்தியாசமான ஒரு சூழ்நிலை இது. ஒரு காலத்தில் பெரும் வெற்றிகளை கொடுத்தவர்கள். ஹீரோக்களாக பிசியாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள். தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், ஹீரோ என்ற இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஒரே ஒரு வெற்றி.
அதற்காக சிலர் தாங்களே படம் தயாரிக்கிறார்கள், சிலர் இயக்குகிறார்கள், சிலர் கஷ்டப்பட்டு உடலை வருத்திக்கொண்டு நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்பும் அந்த ஒரு வெற்றி அவர்களுக்கு கிடைக்க மறுக்கிறது. கடந்த 5 ஆண்டுகளை வைத்து பார்த்தால் விஷால் மட்டுமே சில வருடங்களுக்கு பிறகு பாண்டியநாடு மூலம் ஒரு வெற்றியை பெற்று தனது அடுத்த ரவுண்டை ஆரம்பித்துவிட்டார். போராடிக் கொண்டிருக்கும் மற்ற ஹீரோக்கள் சிலரை பார்க்கலாம்.
சிம்பு
 
இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா? படங்கள் மட்டுமே ஹிட் படங்கள். அதிலும் விண்ணைத் தாண்டி வருவாயா மட்டும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்த படம். விண்ணைத்தாண்டி வருவாயாவிற்கு பிறகு சிம்பு நடித்த வானம், ஒஸ்தி, போடா போடி, இங்க என்ன சொல்லுது படங்கள் தோல்வி அடைந்தன. காதல், பிரேக்-அப் என்று தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டு பிசியான நடிகர் போல வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இப்போது தேவை ஒரு ஹிட். வாலு, இது நம்ம ஆளு, காக்க முட்ட, கவுதம் மேனன் இயக்கும் படம், செல்வராகவன் இயக்க இருக்கும் படங்கள். இவற்றில் ஒன்று ஹிட்டானால்தான் சிம்பு ஹீரோவாக வலம் வர முடியும்.
பிரசன்னா
2004ம் ஆண்டு வெளிவந்த அழகிய தீயே தான் பிரசன்னா கடைசியாக ருசித்த வெற்றி. அதற்கு பிறகு 20 படங்களுக்குமேல் நடித்துவிட்டார் சில சுமார். பல ஃபிளாப். அஞ்சாதே ஹிட் படம் என்றாலும் அதில் அவர் வில்லன்தான். அதுதான் ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அவர் மிகவும் எதிர்பார்த்த சென்னையில் ஒரு நாள், புலிவால், கல்யாண சமையல் சாதம் கூட பெரிதாக அவருக்கு உதவவில்லை. சொந்தப் படம் எடுத்து ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார்.
பிரசாந்த்
2003ல் வெளிவந்த வின்னர் 2004ல் வெளிவந்த ஷாக் படங்கள்தான் பிரசாந்துக்கு வெற்றிப் படங்கள். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்துவிட்டது. வெளிவந்த படங்களும் சரியாக போகவில்லை. சமீபத்தில் வெளிவந்த பொன்னர் சங்கர், மம்பெட்டியான் படமும் கைகொடுக்கவில்லை. மகனுக்கு எப்படியாது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று அப்பா தியாகராஜன் இப்போது சாஹசம் என்ற பெயரில் ஒரு பிரமாண்ட ஆக்ஷன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீகாந்த்
 
2008ல் வெளிவந்த பூ தான் ஸ்ரீகாந்துக்கு கிடைத்த கடைசி அக்மார்க் வெற்றி. அதன் பிறகு நண்பன் வெற்றிப்படமாக இருந்தாலும் அதில் அவர் ஹீரோ இல்லை. பாகன் சுமாராக போனது. ஆனாலும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக தொடர இப்போது தேவை ஒரு வெற்றி. தற்போது நடித்து வரும் ஓம் சாந்தி ஓம், நம்பியார் படங்களில் அது கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
 
பார்த்திபன்
 
அழகிதான் பார்த்திபன் சந்தித்த முழுமையான வெற்றி. அதற்கு பிறகு தென்றல், குடைக்குள் மழை, கண்ணாடி பூக்கள், குண்டக்க மண்டக்க, பச்சக்குதிர, படங்கள் கைகொடுக்கவில்லை. மிகவும் எதிர்பார்த்த ஆயிரத்தில் ஒருவன், ஜன்னலோரம் படங்களும் சிறப்பாக அமையவில்லை. இயக்குனராகவும், நடிகராகவும் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் அந்த வெற்றியாக அமையுமா என்பதை பொறுதிருந்து பார்க்க வேண்டும்.
 
எஸ்.ஜே.சூர்யா
 
பார்த்திபன் நிலைதான் எஸ்.ஜே.சூர்யாவுக்கும். வாலி, குஷி படங்களில் இயக்குனராக ஜெயித்த எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஆரம்பித்தபிறகு அவருக்கு இறங்குமுகம்தான் நியூ, அன்பே ஆருயிரே படங்கள் பரபரப்பை ஏற்படுத்திய அளவுக்கு வெற்றி பெறவில்லை. பிறகு இந்தி, தெலுங்கு என்று போய் அங்கும் தோற்று இப்போது ஒரு வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்கிற வெறியோடு. இசை படத்தை பார்த்து பார்த்து இழைத்துக் கொண்டிருக்கிறார்.
 
ஜீவன்
 
யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, அப்புறம் காணாமல் போய் திடீரென காக்க காக்கவில் வில்லனாகி, திருட்டுபயலே, நான் அவன் இல்லை படங்களில் ஆன்டி ஹீரோவாகி, மச்சக்காரன் படத்தில் நல்ல ஹீரோவானார். அவர் நடித்த கிருஷ்ணலீலை வெளிவரவில்லை. இப்போது செல்வா இயக்கத்தில் தூதன் தான் அவரது கேரியரை தீர்மானிக்கப்போகிறது.
 
நகுல்
 
தேவயானியின் தம்பி நகுல் பாய்ஸ்லில் குண்டு பையனாக இருந்து காதலில் விழுந்தேன் படத்தில் ஒல்லிபிச்சானாக திடீர் அவதாரம் எடுத்து அசத்தினார். ஆனால் அதற்கு பிறகு வந்த கந்தகோட்டை காலைவாறியது, மிகவும் எதிர்பார்த்த நான் ராஜாவாக போகிறேன் ஓடவில்லை. கடுமையாக உழைத்த வல்லினமும் உரிய பலனை தரவில்லை. ஒரே ஒரு ஹிட்டுக்காக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
 
சாந்தனு
 
பாக்யராஜ் மகன் சாந்தனுக்கு இதுவரை வெற்றி தேவதை கண் திறக்கவே இல்லை. சக்ரகட்டி, சித்து பிளஸ்&2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி என அவர் நடித்த படங்கள் எதுவுமே வெற்றிபெறவில்லை. அறிமுகமானதில் இருந்து ஒரு வெற்றிக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். தற்போது நடித்து வரும் வாய்மை, அமளி துமளி படங்கள் அவர் தேடும் வெற்றியை கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
 
அர்ஜுன்
 
வந்தே மாதரம்தான் அர்ஜுன் கடைசியாக ருசித்த வெற்றி. அதன் பிறகு மங்காத்தாவில் அஜீத்துடன் இணைந்த வெற்றி, கடல் படம் எதிர்பாராத தோல்வி, ஆனாலும் ஹீரோவில் இருந்து இறங்கி வர தயக்கம் அர்ஜுனுக்கு. எப்படியும் ஒரு ஹிட் கொடுத்து ஹீரோவாகவே தொடர விரும்புகிறார். அதனால் சொந்த தயாரிப்பில் ஜெய்ஹிந்த் பார்ட் 2 எடுத்து வருகிறார்.
 
இவர்கள் மட்டுமல்லாது சிபிராஜ், சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி மகன் ஜித்தன் ரமேஷ், ஷாலினியின் தம்பி ரிச்சர்ட், ஷாம், பரத், விநய், கிருஷ்ணா, என ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் நீளமானது. அவர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துவோம்...

Comments