கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா!!!

29th of April 2014
சென்னை::கோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ராணா என்ற படத்தில் கமிட்டானார் ரஜினி. இப்படத்தின் பூஜை நடைபெற்ற அன்றே அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதனால் அப்படம் கைவிடப்பட்டது. மாறாக அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில், கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் தற்போது ரிலீஸ் தேதியை(மே 9ம் தேதி) நெருங்கிவிட்டது.
 
இந்நிலையில் கோச்சடையான் படத்திற்கு ரஜினி, கே.வி.ஆனந்த், கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் ஆகிய மூவரில் ஒருவரது படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது. ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார். பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார் சொல்ல, ரஜினிக்கு அக்கதை மிகவும் பிடித்து போனதால் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.
 
ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி. இதற்கிடையே இப்படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். இதனை கில்டு சங்கத்திலும் ரவிக்குமார் முறையாக பதிவு செய்துள்ளார். ரஜினி-ரவிக்குமார் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று, இப்படமும் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது. ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
 
லிங்கா பெயர், நடிகர் ரஜினிகாந்தின் பேரனும், தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகனின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது...
 

Comments