நான் சினிமாவில் காமெடி செய்கிறேன் சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் : வடிவேலு பேட்டி!!!! திரைப்படத்துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தெனாலிராமன் ஆடியோ விழா!!!

3rd of April 2014
சென்னை::நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் என்றார் வடிவேலு. வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் தெனாலிராமன். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த இரண்டரை வருடம் நடிக்காமல் ஓய்வு எடுத்தேன். அது எனக்கு தேவைப்பட்டது. எனக்கு வேதனை கிடையாது. மகிழ்ச்சிதான். யாராவது என்னை வைத்து படம் தயாரிக்க நினைத்தால் உடனே அவர்களை பயமுறுத்தி வடிவேலுவையா போடுகிறீர்கள், அவ்வளவுதான் என்று சொல்லி முடக்கினார்கள்.
 
தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதை ஏற்றிருந்தால் தமிழ் படத்திலிருந்து வடிவேலு மூட்டை கட்டிக்கொண்டு போய்விட்டான் என்று கூறி இருப்பார்கள். ஆனால் எதற்கும்  தயங்காமல் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார் அகோரம்.  எனக்கு ஜோடியாக நடிக்க வந்த 6 ஹீரோயின்களை பயமுறுத்தியே விரட்டி விட்டார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் மீனாட்சி தீட்சித் நடித்தார்.  சினிமாவில் நான் காமெடி செய்துகொண்டிருக்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். எனக்கு அரசியல் வேண்டாம்.
 
சினிமாவில்தான் என் முழுகவனம் இருக்கும். தெனாலிராமன் கதை கற்பனை கலந்தது. இதில் கிருஷ்ணதேவராயர் என்ற மன்னரின் பெயரை பயன்படுத்தவே இல்லை. அவரைப்பற்றி எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. புதிதாக 6 கதைகள் தேர்வு செய்திருக்கிறேன். மற்ற ஹீரோக்கள் படத்திலும் எனக்கேற்ற வேடம் வந்தால் நிச்சயம் நடிப்பேன். இவ்வாறு வடிவேலு கூறினார்...

திரைப்படத்துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தெனாலிராமன் ஆடியோ விழா!

அம்மாவின் கோபம் தீர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் வடிவேலு. ஆனால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், வடிவேலு மீதான அம்மாவின் கோபம் இம்மியளவும் குறையவில்லை என்றே தோன்றுகிறது.
 
தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை, ஆளும்கட்சியின் டி.வி.க்குக் கொடுப்பதன் மூலம் அம்மாவை குளிர்வித்துவிடலாம் என்று கணக்குப்போட்ட வடிவேலு, தன் எண்ணத்தை தயாரிப்பாளர்களிடம் கூறினாராம். அதன்படியே தயாரிப்பு தரப்பு காய் நகர்த்தியது. சேனல் நிர்வாகமோ இந்த டீலுக்கு அசைந்து கொடுக்கவில்லையாம்.
 
அடுத்து தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பு சார்பாக ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் தெனாலிராமன் படத்தில் தெலுங்கர்களை இழிவு செய்திருப்பதாகவும், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று தணிக்கைக்குழுவில் மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். எனவே இவரது புகாருக்குப் பின்னால் ஆளும்கட்சியின் உள்குத்து இருக்குமோ என்று தெனாலிராமன் படக்குழுவினருக்கு சந்தேகம் எழுந்தநிலையில்.. நேற்று தெனாலிராமன் படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெற்றது.
 
வழக்கமாக இதுபோன்ற இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் திரைப்படத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அணி திரண்டு வருவார்கள். குறிப்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள். தெனாலிராமன் இசைவெளியீட்டு விழாவிலோ திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களோ, திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ ஒருவர் கூட வரவில்லை. எனவே தெனாலிராமன் இசையை அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வெளியிட, இசையமைப்பாளர் இமான் பெற்றுக் கொண்டார்....
  

Comments