மண்ணின் மக்களுக்காக இசை நிகழ்ச்சி: இளையராஜா பேட்டி!!!!!

2nd of April 2014
சென்னை::மண்ணின் மக்களை மகிழ்விக்கவே, மதுரையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என, மதுரையில் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 5ம் தேதி ராஜாவின் சங்கீத திருநாள் எனும் தலைப்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இதில் அவரது தந்தையும், இசைஞானியுமான இளையராஜா கலந்து கொண்டு பாட இருக்கிறார். அவர்களுடன் பிரபல பின்னணி பாடகர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சிக்காக மதுரை வந்த இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா, பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
 
இளையராஜா பேசும்போது,
 
மதுரை தமுக்கத்தில் ஏப்., 5 மாலை 6 மணிக்கு, நடக்கும் நிகழ்ச்சியில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியுள்ளதால், நான் அதிக பாடல்களை பாட முடியாது. ரசிகர்களுக்காக குறிப்பிட்ட பாடல்களை பாட உள்ளேன். கனடா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். மண்ணைச் சேர்ந்த மக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னுடன் 38 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்து இசைக்குழுவினரும் இதற்காக வந்துள்ளனர்.

ஸ்டூடியோ தரத்தில்:
 
துல்லியமான சவுண்ட் சிஸ்டம் அமைக்க உள்ளோம். சிறு தவறு கூட ஏற்படக்கூடாது என்பதற்காக பல ஒத்திகைகள் பார்த்துள்ளோம். எலக்ட்ரானிக்ஸ் புரோகிராம் இசைக்கும், நேரடி வாசிப்பிற்கும் வித்தியாசம் உள்ளது. நேரடி வாசிப்பில் சில தவறுகள் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. அது கூடாது என்பதற்காக தான், ஒத்திகையை தொடங்கியுள்ளோம். அதை கண்காணிக்கவே நானும் வந்துள்ளேன். சிகிச்சைக்கு பின் தினமும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இசையில் சிரமம் கிடையாது, அது ஒரு ரிலாக்ஸ். பிரகாஷ்ராஜ் படத்தின் ஐதராபாத் ஆடியோ வெளியீடு மும்பையில் அமிதாப் படத்திற்கான ரிக்கார்டிங் பணிகளை பார்த்து விட்டு வந்துள்ளேன். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாலா, மிஷ்கின், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உட்பட பலர் வருகின்றனர். அமிதாப் நடிக்கும் பட இயக்குனர் பால்கியும் வருகிறார். நிகழ்ச்சி மேடையில் பேன்ஸ் கிளப் குறித்து அறிவிப்பு வெளியாகும், என்றார்.

அவரது மகன் கார்த்திக்ராஜா கூறுகையில்,
 அப்பா வந்தது நிகழ்ச்சிக்கான முதல் வெற்றி. எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எஸ்.ஜானகியை தவிர அனைத்து பாடகர்களும் பங்கேற்கின்றனர். இது எனக்கு ஸ்பெஷல் ஷோ. அதை பார்க்கும் போது ரசிகர்கள் உணர்வார்கள், என்றார்.

பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று இளையராஜா தரிசனம் செய்தார்.

Comments