ஒற்றுமையாக இருக்கும் மக்கள் இடையே ‘‘மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்’’ நடிகர் வடிவேல் உருக்கமான பேட்டி!!!

11th of April 2014
சென்னை::தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்கள் இடையே மொழி சண்டையை இழுத்து விடாதீர்கள்’’ என்று நகைச்சுவை நடிகர் வடிவேல் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
 
‘தெனாலிராமன்’
வடிவேல் கதாநாயகனாக நடித்து, விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘தெனாலிராமன்.’ இந்த படத்தில் வடிவேல் தெனாலிராமனாகவும், அரசனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தியிருப்பதாக தெலுங்கு அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த பிரச்சினையில், வடிவேலுவுக்கு ஆதரவாக ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்தார். அவரை கண்டித்து தெலுங்கு அமைப்பை சேர்ந்தவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.
வடிவேல் பேட்டி
இந்த நிலையில், ‘தெனாலிராமன்’ பட பிரச்சினை தொடர்பாக நடிகர் வடிவேல் ‘தினத்தந்தி’ நிருபருக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘தெனாலிராமன், ஒரு அற்புதமான படம். இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்று எல்லா மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த சமயத்தில், யாரோ பிரச்சினையை தூண்டி விடுகிறார்கள். படத்தை பார்க்காமலே கருத்து தெரிவிப்பதில், எந்த நியாயமும் இல்லை.
‘தெனாலிராமன்’ படத்தில், கிருஷ்ணதேவரா
யர் என்று ஒரு வார்த்தை கூட இல்லை. தெனாலிராமனுக்கும், அரசருக்கும் உள்ள நட்பை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். படத்தில், சுந்தர தெலுங்கு மொழியை உயர்த்திப்பேசி நடித்து இருக்கிறேன்.
அபூர்வ மருந்து
எனக்கு மொழி வேறுபாடு கிடையாது. மொழி தெரியாதவர்கள் கூட என் ‘காமெடி’யை ரசிப்பார்கள். அதை சிலர் கெடுக்க முயற்சி செய்கிறார்கள். ‘காமெடி’யாக நடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ‘காமெடி’யை இழிவாக நினைக்காதீர்கள்.
நகைச்சுவை என்பது உடலுக்கும், மனசுக்கும் ஆரோக்கியம் தருகிற அபூர்வ மருந்து. சஞ்சீவ மலையில் கூட இந்த மருந்து கிடைக்காது. அதை நான் மக்களுக்கு தாராளமாக கொடுத்து வருகிறேன். நான், யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டேன். புண்பட்ட மனதுக்கு நகைச்சுவை என்ற மருந்தை கொடுப்பவன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சண்டை வேண்டாம்
தமிழ்நாட்டில், எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் மொழி சண்டையை இழுத்து விட்டு, சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்காதீர்கள். அரசு கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது.
யாரோ தூண்டி விடுகிறார்கள் என்பதற்காக, ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மனதையும் புண்படுத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.’’
இவ்வாறு நடிகர் வடிவேல் கூறினார்...
 

Comments