3டியில் பத்து நிமிடங்கள் பார்த்து பெரும் ஏமாற்றம் அடைந்தேன்: ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது: ரஜினி ஓப்பன் டாக்!!!

22nd of April 2014
 சென்னை::ரஜினியை ஒரு காட்சிப் பொருளாக வைத்து பல விதங்களில் ‘கோச்சடையான்’ படத்துக்கு ஸ்பான்சர்களைப் பிடித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார் அவருடைய மகளும் டைரக்டருமான செளந்தர்யா அஸ்வின்.

ஆனால் அவர் பில்டப் பண்ணுகிற அளவுக்கு கோச்சடையானில் பெரிதாக ஒன்றுமில்லை என்ற உண்மையைச் சொல்லி செளந்தர்யாவுக்கு ‘ஷாக்’ கொடுத்தார் ரஜினி.
ரஜினி, தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் ‘விக்ரம் சிம்மா’ என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் புரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது :

எனக்கு சினிமா பற்றிய டெக்னாலஜி எதுவும் தெரியாது. சினிமா எப்படி எடுப்பார்கள் என்று கூட தெரியாது. இருந்தாலும் புதிய டெக்னாலஜிகளுடன் கூடிய படத்தில் நடித்துள்ளேன். 2½ ஆண்டுகளுக்கு முன்பு நான் நடிக்க வேண்டிய படம் தான் இந்த ‘ராணா’. அந்த படம் எடுக்கும் போது எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் படத்தில் நடிக்கக் கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார்கள்.

ராணா’ படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்தது. சண்டைக் காட்சிகள் உண்டு. ஆனால் டாக்டர்கள் சண்டை காட்சியில் நடிக்க கூடாது. எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது என்று கூறியதால் அந்த படம் நிறுத்தப்பட்டது.

இந்த நேரத்தில் தான் லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னை தேடி வந்து கோச்சடையான் படம் பற்றி கூறினார். எனது மகள் சவுந்தர்யா டைரக்டர் செய்கிறாள் என்பதால் இதனை ஒப்புக் கொண்டேன். கடந்த 2½ வருடமாக கஷ்டப்பட்டு சவுந்தர்யா இந்த படத்தை எடுத்து உள்ளார். இந்த படத்தை 2 டியில் பார்த்தேன். 10 நிமிடம் பார்த்தபோது பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.

உயிரோடு இல்லாதவர்களை வைத்துதான் அனிமேஷன் படம் எடுப்பார்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கும் போதே என்னை வைத்து அனிமேஷன் முறையில் படம் எடுத்ததை பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் 10 நிமிடத்துக்கு பிறகு கதையின் போக்கு என்னை அதில் ஒன்றிப்போகச் செய்து விட்டது.

அனிமேஷன் என்று தெரியாமல் கேரக்டருடன் ஒன்றி படத்தை ரசித்தேன். ஆனால் ‘கோச்சடையான்’ கமலஹாசன் நடிக்க வேண்டிய படம். கமல் என்னை விட சிறந்த நடிகர். சினிமா டெக்னாலஜி பற்றி நன்கு தெரிந்தவர். ரோபோ, விக்கிரம் சிம்மா போன்ற படங்கள் எல்லாமே அவர் நடித்திருக்க வேண்டிய படங்கள். இருந்தாலும் டெக்னாலஜியைப் பற்றி தெரியாத நான் இந்தப் படத்தில் நடித்தது என்பது கடவுள் எனக்குத் தந்த பரிசாகத் தான் கருதுகிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார்..
’’

Comments